அல் கொர்: ஆசிய கிண்ணக் காற்பந்துப் போட்டியில் அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளன ஈரான், நடப்பு வெற்றியாளர் கத்தார்.
காலிறுதிச் சுற்றில் கத்தார், பெனால்டிகளில் உஸ்பெகிஸ்தானை வென்றது. ஆட்டம் 1-1 எனும் கோல் கணக்கில் சமநிலையில் முடிந்ததைத் தொடர்ந்து பெனால்டிகளின் மூலம் வெற்றிபெறும் அணி தீர்மானிக்கப்பட்டது.
பெனால்டிகளில் 3-2 எனும் கோல் கணக்கில் கத்தார் வென்றது.
மற்றொரு காலிறுதியாட்டத்தில் ஜப்பானை 2-1 எனும் கோல் கணக்கில் வென்றது ஈரான்.
முற்பாதியாட்டத்தில் ஜப்பான் முன்னுக்குச் சென்றது. 55வது நிமிடத்தில் ஈரான் சமநிலை கண்டது.
ஆட்டத்தின் கடைசி சில நிமிடங்களில் ஈரானுக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. அதை கோலாக்கி தனது அணியை அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறச் செய்தார் அலிரேஸா ஜஹான்பாக்ஷ்.