சென்னை: ராஜ்கோட்டில் நடந்துவரும் இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இருந்து சுழற்பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் விலகியுள்ளார். அவரது தாய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கும் நிலையில் அஸ்வின் இரண்டாம் நாள் ஆட்டத்துடன் அந்த டெஸ்ட் போட்டியில் இருந்து பாதியில் விலகினார்.
அஸ்வின் இல்லாத நிலையில் இந்திய அணி 10 வீரர்களுடன் ஆட வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டுள்ளது. களகாப்பிற்கு மட்டுமே மாற்று வீரரை இந்திய அணி பயன்படுத்திக் கொள்ளலாம். மற்றபடி பந்து வீசவோ, பந்தடிக்கவோ மாற்று வீரர்களை இந்திய அணி பயன்படுத்த முடியாது.
அஸ்வின் இல்லாதது பின்னடைவாக இருந்தாலும் மற்ற வீரர்கள் சிறப்பாக செயல்பட்டு இங்கிலாந்து அணியின் ஓட்டங்களைக் குறைத்தனர்.
மூன்றாவது நாள் ஆட்டத்தின் பாதியில் இங்கிலாந்து 7 விக்கெட்டுகள் இழந்து 310 ஓட்டங்கள் எடுத்திருந்தது. இந்தியா அதன் முதல் இன்னிங்சில் 445 ஓட்டங்கள் எடுத்திருந்தது.
இந்நிலையில் வெள்ளிக்கிழமை அன்று டெஸ்ட் போட்டிகளில் 500 விக்கெட் வீழ்த்தி சாதனை புரிந்த அஸ்வினுக்கு பிரதமர் நரேந்திர மோடி சமூக ஊடகம் வழி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
“500 டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்திய ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு வாழ்த்துகள். அவரது பயணம் மற்றும் சாதனைகள் அவரது திறமை மற்றும் விடாமுயற்சிக்கு சான்றாகும். அவர் மேலும் சிகரங்களை எட்டிப்பிடிக்க எனது மனமார்ந்த வாழ்த்துகள்” என மோடி வாழ்த்தினார்.