ராஞ்சி: இங்கிலாந்துக்கு எதிரான நான்காவது டெஸ்ட் ஆட்டத்தில் இந்திய அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளது.
இந்த வெற்றியின் மூலம் 5 டெஸ்ட் ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்தியா 3-1 என்று கைப்பற்றியுள்ளது.
பூவா தலையாவில் வெற்றி பெற்ற இங்கிலாந்து முதலில் பந்தடித்தது. ஜோ ரூட் சிறப்பாக ஆடி சதமடித்தார். இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 353 ஓட்டங்கள் எடுத்தது. இந்தியா அதன் முதல் இன்னிங்சில் 307 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது.
46 ஓட்டங்கள் முன்னிலை பெற்ற நிலையில் பந்தடித்த இங்கிலாந்து இந்தியாவின் சுழற்பந்து வீச்சாளர்களை சமாளிக்க முடியாமல் 145 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது. அஷ்வின் 5 விக்கெட்டுகளையும் குல்தீப் யாதவ் 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
சவாலான இலக்கை விரட்டிய இந்தியாவுக்கு அணித் தலைவர் ரோகித் சர்மா நல்ல துவக்கம் தந்தார். இருப்பினும் இந்திய அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
இறுதியில் ஷுப்மன் கில் (52), துருவ் ஜுரெல் (39) நிலைத்து ஆடி இந்திய அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர்.
தொடரின் கடைசி ஆட்டம் மார்ச் 5ஆம் தேதி தரம்சாலாவில் நடக்கவுள்ளது.