புதுடெல்லி: கிரிக்கெட் விமர்சகர்கள் உள்ளிட்டோரின் பாராட்டு மழையில் நனைந்துகொண்டிருக்கிறார் தனது இரண்டாவது டெஸ்ட் போட்டியிலேயே ஆட்ட நாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட துருவ் ஜுரெல்.
2022ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இந்தியாவின் விக்கெட் காப்பாளரும் பந்தடிப்பாளருமான 26 வயது ரிஷப் பன்ட் மோசமான கார் விபத்துக்கு ஆளானார். பன்ட்டின் இடத்தை நிரப்பும் முயற்சியில் இந்தியா இறங்கியது.
ராஜ்கோட் நகரில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரின் மூன்றாவது போட்டிதான் 23 வயது ஜுரெல் முதன்முறையாகக் களமிறங்கிய டெஸ்ட் போட்டி ஆகும். அதில் 434 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றிகண்டது.
டெஸ்ட் போட்டிகளில் அத்தனை ஓட்டங்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றிபெற்றதில்லை.
இந்தியா-இங்கிலாந்து டெஸ்ட் தொடரின் நான்காவது போட்டியில் இங்கிலாந்து 353 ஓட்டங்களை எடுத்திருந்தது. இந்தியா ஏழு விக்கெட்டுகள் இழப்பிற்கு 177 ஓட்டங்களை எடுத்திருந்த நிலையில் களமிறங்கிய ஜுரெல் 90 ஓட்டங்களைக் குவித்து தனது அணியை மீட்டார்.
பின்னர் 192 ஓட்டங்களைத் துரத்திய இந்திய அணி ஐந்து விக்கெட்டுகள் இழப்பிற்கு 120 ஓட்டங்களை மட்டுமே எடுத்து சிரமப்பட்டது. ஆனால் ஷுப்மன் கில்லுடன் இணைந்து தற்காப்பு அரணுடன் சிறப்பாக விளையாடினார் ஜுரெல். தொடரின் நான்காவது ஆட்டத்திலேயே இந்தியா வெற்றிபெறுவது உறுதியானது. 3-1 எனும் ஆட்டக்கணக்கில் முன்னணி வகித்தது இந்தியா.
இந்திய கிரிக்கெட் சகாப்தம் சச்சின் டென்டுல்கர், முன்னாள் வெஸ்ட் இண்டீஸ் நட்சத்திரம் ஈயன் பிஷப், இங்கிலாந்தின் தற்போதைய அணித் தலைவர் உள்ளிட்டோர் ஜுரெல்லைப் பாராட்டியுள்ளனர்.