வெல்லிங்டன்: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் முதல் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்ட முடிவில் நியூசிலாந்து மூன்று விக்கெட்டுகள் இழப்பிற்கு 111 ஓட்டங்களை எடுத்துள்ளது.
வெற்றி இலக்கான 369 ஓட்டங்களை அடைய நியூசிலாந்து இன்னும் 258 ஓட்டங்களைக் குவிக்க வேண்டியுள்ளது.
இப்போட்டியின் முதல் இன்னிங்சில் 383 ஓட்டங்களை எடுத்தது ஆஸ்திரேலியா. நியூசிலாந்து 179 ஓட்டங்களை மட்டுமே எடுத்தது.
இரண்டாவது இன்னிங்சில் ஆஸ்திரேலியாவை 164 ஓட்டங்களை மட்டுமே எடுக்க விட்டது நியூசிலாந்து. நியூசிலாந்தின் பந்துவீச்சாளர் கிளென் ஃபிலிப்ஸ் ஆஸ்திரேலியாவின் ஐந்து விக்கெட்டுகளை வெளியேற்றினார். முதல்நிலை டெஸ்ட் போட்டிகளில் முதன்முறையாக ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தினார் ஃபிலிப்ஸ்.
எனினும், இரண்டாவது இன்னிங்சில் பந்துவீச்சில் சிறப்பாக விளையாடிய நியூசிலாந்து, பந்தடிப்பில் சிரமப்படுகிறது. முதலில் பந்தடிக்கக் களமிறங்கிய டாம் லேத்தன், வில் யங் இருவரும் விரைவிலேயே வெளியேற்றப்பட்டனர்.
கேன் வில்லியம்சன் ஒன்பது ஓட்டங்கள் எடுத்திருந்தபோது ஆஸ்திரேலியாவின் சுழற்பந்து வீச்சாளர் நேத்தன் லியோன் அவரையும் வெளியேற்றினார்.
அதனைத் தொடர்ந்து நியூசிலாந்தின் இந்திய வம்சாவளி வீரரான ரச்சின் ரவீந்திரா அரை சதமடித்தார். 56 ஓட்டங்களை எடுத்த ரவீந்திரா, குறுகிய காலத்திலேயே டெஸ்ட் போட்டிகளில் இருமுறை அரை சதமடித்துவிட்டார்.