லண்டன்: இங்கிலிஷ் பிரீமியர் லீக் காற்பந்துப் போட்டி விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது.
புள்ளிப்பட்டியலில் முதலிடத்திற்கு கடுமையான போட்டி நிலவுகிறது.
வெள்ளிக்கிழமை மாலை நிலவரப்படி பட்டியலில் லிவர்பூல் குழு 63 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. 62 புள்ளிகளுடன் மான்செஸ்டர் சிட்டி இரண்டாவது இடத்தில் உள்ளது. மூன்றாவது இடத்தில் 61 புள்ளிகளுடன் ஆர்சனல் உள்ளது.
இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை இரவு லிவர்பூல் குழுவை எதிர்த்து மான்செஸ்டர் சிட்டி விளையாடவுள்ளது. இந்த ஆட்டத்தின் வெற்றியாளருக்கு கிண்ணத்தை வெல்லும் வாய்ப்பு அதிகரிக்கும் என்று காற்பந்து கவனிப்பாளர்கள் கருதுகின்றனர்.
இருப்பினும் ஆர்சனல் குழு மனந்தளராமல் போராடி வருகிறது. சனிக்கிழமை நள்ளிரவுக்குப் பின் ஆர்சனல் குழு பிரண்ட்ஃபோர்ட் குழுவுடன் மோதுகிறது.
“லிவர்பூல் - மான்செஸ்டர் சிட்டி ஆட்டம் மீது என் கவனம் இருந்தாலும் பிரண்ட்ஃபோர்ட் அணிக்கு எதிரான எங்கள் ஆட்டம் மிக முக்கியமானது. அந்த அணியை வீழ்த்தி மூன்று புள்ளிகளை பெறுவதுதான் முதல் இலக்கு” என்று ஆர்சனல் குழுவின் நிர்வாகியான மிக்கல் அர்டெட்டா தெரிவித்துள்ளார்.
மற்ற அணிகளின் வெற்றி தோல்வியை தம்மால் கட்டுப்படுத்த முடியாது. அதனால் ஆர்சனல் தொடர்ந்து வெற்றிகளைக் குவித்து புள்ளிப்பட்டியலில் முன்னேறிக்கொண்டே இருக்க வேண்டும் என்றார் அர்டெட்டா.