லிவர்பூல்: இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்தில் சிங்கப்பூர் நேரப்படி ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 10) இரவு 11.45 மணிக்கு லிவர்பூலும் மான்செஸ்டர் சிட்டியும் மோதவுள்ளன.
இப்பருவத்தின் லீக் பட்டத்தை வெல்ல இவ்விரு குழுக்களும் தீவிரமாக இறங்கியுள்ள நிலையில் இந்த ஆட்டம் நடைபெறுகிறது. இந்நிலையில், தனது வாழ்நாளில் சிட்டியின் பெப் கார்டியோலாதான் ஆகச் சிறந்த காற்பந்து நிர்வாகி என்று லிவர்பூல் நிர்வாகி யர்கன் கிளோப் பாராட்டியுள்ளார்.
கடந்த ஆறு ஆண்டுகளில் ஐந்து முறை லீக் பட்டத்தை வென்றிருக்கிறது சிட்டி. அந்தக் காலகட்டத்தில் லிவர்பூல்தான் அக்குழுவுக்குப் பரம வைரியாக இருந்து வந்துள்ளது.
தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக பிரிமியர் லீக், ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக், எஃப்ஏ கிண்ணம் ஆகிய மூன்றையும் வெல்லும் இலக்குடன் இருக்கிறது சிட்டி. இப்படிப்பட்ட சூழலில் கார்டியோலா, பல்வேறு அம்சங்களில் மிகச் சிறப்பாகச் செயல்படுவதாக கிளோப் குறிப்பிட்டார்.
“எனக்குத் தெரியும். நானும் இப்பணியில் இருப்பதால் சிறப்பாகச் செய்வோரைக் காணும்போது எனக்குப் புரியும். கார்டியோலா நிச்சயமாக அப்படிப்பட்ட ஒருவர்தான். பல ஆண்டுகளாக அவரின் குழுக்களை வைத்து அவர் படைத்த சாதனைகளே அதற்குச் சான்று,” என்றார் கிளோப்.
மேலும், தன்னைவிட கார்டியோலாவின் இடத்தை நிரப்புவதுதான் சிரமம் என்றும் கிளோப் சொன்னார். இந்தப் பருவம் முடிந்ததும் லிவர்பூலிலிருந்து வெளியேறவுள்ளார் கிளோப்.
இதற்கிடையே, இந்த ஆட்டத்தை முன்னிட்டு லிவர்பூலின் டிரென்ட் அலெக்சாண்டர் ஆர்னல்ட் சிட்டியின் வெற்றிப் பயணத்தைக் குறைகூறிப் பேசியிருந்தார்.
நிதியைப் பொறுத்தவரை சிட்டிக்கும் லிவர்பூலுக்கும் இடையே பெரிய அளவில் வேறுபாடு இருப்பதால் லிவர்பூலுக்குக் கிடைத்திருக்கும் வெற்றிக்கே கூடுதல் சிறப்பு உண்டு என்று அலெக்சாண்டர் ஆர்னல்ட் கருத்துரைத்தார். சிட்டி நட்சத்திரம் எர்லிங் ஹாலண்ட் அதை மறுத்துப் பேசினார்.
எனினும், அலெக்சாண்டர் ஆர்னல்டுக்கு அவ்வாறு சொல்ல உரிமை உண்டு என்று கிளோப் தற்காத்துப் பேசினார். இந்த விவகாரத்தில் தான் கருத்து தெரிவிக்க விரும்பவில்லை என்றார் கார்டியோலா.