லிவர்பூல்: ஆட்டத்தின் பிற்பாதியில் அலெக்சிஸ் மெக்அலிஸ்டர் போட்ட பெனால்டி கோலால், லிவர்பூல் குழு தோல்வியிலிருந்து தப்பியது. அக்குழுவும் மான்செஸ்டர் சிட்டி குழுவும் லிவர்பூலின் ஆன்ஃபீல்டு விளையாட்டரங்கில் மார்ச் 10ஆம் தேதி மோதின. இரு குழுக்களும் தலா ஒரு கோல் போட்டு ஆட்டத்தை சமநிலையில் முடித்துக்கொண்டன.
இங்கிலிஷ் பிரிமியர் லீக் பட்டியலில் லிவர்பூல் 64 புள்ளிகளுடன் இரண்டாம் நிலையில் உள்ளது. அதே புள்ளிகளுடன் கோல் வித்தியாசத்தில் முன்னணியில் இருக்கும் ஆர்சனல், பட்டியலில் முதல் நிலையில் உள்ளது. கடந்த 21 ஆட்டங்களில் தோல்வி காணாத மான்செஸ்டர் சிட்டி 63 புள்ளிகளுடன் மூன்றாம் நிலையில் உள்ளது.
இங்கிலிஷ் பிரிமியர் லீக் போட்டியில் குழுக்களுக்கு இன்னும் பத்து ஆட்டங்கள் எஞ்சியுள்ளன.
“எங்கள் அணி அற்புதமாக சிட்டி அணிக்கு ஈடுகொடுத்து ஆடியது. இறுதி வரை போராடி, பட்டியலின் மேல்மட்டத்தில் இருக்க உறுதியுடன் இருக்கிறோம்,” என்றார் லிவர்பூல் அணியின் நிர்வாகி யர்கன் கிளோப்.
ஆட்டத்தின் 23வது நிமிடத்தில் சிட்டியின் கெவின் டி பிரய்ன கொடுத்த பந்தை கோலாக்கினார் ஜான் ஸ்டோன்ஸ்.
சிட்டியின் முன்னணியை ஒரு முடிவுக்குக் கொண்டு வந்தார் லிவர்பூல் குழுவின் அலெக்சிஸ் மெக்அலிஸ்டர். ஆட்டத்தின் 50வது நிமிடத்தில் அக்குழுவுக்குக் கிடைத்த பெனால்டி வாய்ப்பை அவர் கோலாக்கி, கோல் எண்ணிக்கையை 1-1 என்று சமப்படுத்தினார்.
இந்த ஆட்டமே பிரிமியர் லீக்கில் மான்செஸ்டர் குழு நிர்வாகி பெப் குவாடியோலாவுக்கும் லிவர்பூல் நிர்வாகி யர்கன் கிளோப்புக்கும் கடைசி ஆட்டமாக இருக்கக்கூடும். காரணம் இருவருமே இக்காற்பந்துப் பருவத்தின் இறுதியில் தத்தம் குழுக்களிலிருந்து விலகுவதாக அறிவித்து விட்டனர்.
“இன்னும் பத்து ஆட்டங்கள் உள்ளன. அதற்குள் ஏதுவேண்டுமானாலும் நடக்கலாம்,” என்று பெப் குவாடியோலா தெரிவித்ததாக ராய்ட்டர்ஸ் செய்தி கூறுகிறது.