லண்டன்: ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் காற்பந்துப் போட்டியின் காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளது இங்கிலிஷ் பிரிமியர் லீக் குழுவான ஆர்சனல்.
காலிறுதிக்கு முந்தைய சுற்றில் ஆர்சனலும் போர்ச்சுகலைச் சேர்ந்த போர்ட்டோவும் மோதிய இரண்டு ஆட்டங்களின் மொத்த கோல் எண்ணிக்கை 1-1.
போர்ச்சுகலில் நடந்த முதல் ஆட்டத்தில் போர்ட்டோ 1-0 எனும் கோல் கணக்கில் வென்றது. சிங்கப்பூர் நேரப்படி புதன்கிழமை (மார்ச் 13) அதிகாலை லண்டனில் நடைபெற்ற இரண்டாம் ஆட்டத்தில் அதே கோல் எண்ணிக்கையில் ஆர்சனல் வென்றது. லியாண்ட்ரோ ட்ரொசார்ட் அக்குழுவின் கோலைப் போட்டார்.
அதனைத் தொடர்ந்து இரண்டாம் ஆட்டம் நிறைவடைந்த பிறகு பெனால்டிகளின் மூலம் வெற்றிபெறும் குழு தீர்மானிக்கப்பட்டது. பெனால்டிகளில் 4-2 எனும் கோல் கணக்கில் வென்றது ஆர்சனல்.
2010ஆம் அண்டுக்குப் பிறகு முதன்முறையாக ஆர்சனல் சாம்பியன்ஸ் லீக் காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறியிருக்கிறது. தனது குழுவின் வெற்றியை எண்ணி மகிழ்ச்சி தெரிவித்தார் ஆர்சனல் நிர்வாகி மிக்கெல் அர்ட்டெட்டா.
“இது எங்களுக்கு மிகப் பெரிய அனுபவமாக அமைந்தது. பெனால்டிகளில் வெல்லவேண்டியிருந்தது. கோல் காப்பாளர் டேவிட் ராயாவுக்குப் பாராட்டு தெரிவிக்கிறேன். ஆட்டத்தில் சில சவால்களை எதிர்நோக்கியபோதும் மனவுறுதியுடன் விளையாடியதற்கு அவருக்கு வெகுமானம் கிடைத்தது,” என்று தனது கோல் காப்பாளர் டேவிட் ராயாவையும் பாராட்டினார் அர்ட்டெட்டா.