மும்பை: மகளிர் ஐபிஎல் என்று அழைக்கப்படும் மகளிர் பிரீமியர் லீக்கின் இறுதி ஆட்டத்திற்குப் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி முன்னேறியுள்ளது.
வெள்ளிக்கிழமை இரவு மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான ‘எலிமினேட்டர்’ ஆட்டத்தில் பெங்களூர் அணி 5 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
முதலில் பந்தடித்த பெங்களூரு, மும்பை இந்தியன்ஸ் பந்துவீச்சைத் தாக்குப் பிடிக்காமல் திணறியது. இருப்பினும் எல்லிஸ் பெரி சிறப்பாக ஆடி 66 ஓட்டங்கள் குவித்தார். இறுதியில் பெங்களூர் 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழந்து 135 ஓட்டங்கள் எடுத்தது.
இலக்கை விரட்டிய மும்பை அணிக்குப் பெங்களூரு பந்துவீச்சாளர்கள் நெருக்கடி கொடுத்து ஓட்டங்களை கட்டுப்படுத்தினர். மும்பை அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழந்து 130 ஓட்டங்கள் மட்டுமே எடுத்து தோல்வியைத் தழுவியது.
இந்த வெற்றியின் மூலம் முதல்முறையாக இறுதி ஆட்டத்துக்கு பெங்களூரு தகுதி பெற்றுள்ளது.
டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி குழுச்சுற்றில் சிறப்பாக விளையாடி புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்ததால் அது நேரடியாக இறுதிச்சுற்றுக்குத் தகுதிபெற்றது.
கடந்த முறை இறுதிச்சுற்றில் மும்பையிடம் தோற்ற டெல்லி இம்முறை விட்டுக்கொடுக்காது என்று கிரிக்கெட் கவனிப்பாளர்கள் கூறுகின்றனர்.
முதல் பருவத்திற்கு கிடைத்த ஆதரவுபோலவே இரண்டாவது பருவத்திலும் மகளிர் பிரீமியர் லீக்கிற்கு ஆதரவு கிடைத்துள்ளது. அதனால் இனி வரும் ஆண்டுகளில் அணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்று கவனிப்பாளர்கள் கருதுகின்றனர்.
இறுதியாட்டம் ஞாயிற்றுக்கிழமை இரவு டெல்லியில் நடக்கிறது.