பிரான்ஸ் தலைநகர் பாரிசில் நடைபெறவுள்ள இவ்வாண்டின் ஒலிம்பிக் விளையாட்டுகளுக்கு சிங்கப்பூர் வாட்சண்டை வீராங்கனை அமிதா பெர்த்தியர் தகுதிபெற்றுள்ளார்.
இரண்டாவது முறையாக ஒலிம்பிக் விளையாட்டுகளில் போட்டியிடவுள்ளார் 23 வயது பெர்த்தியர். தென்கிழக்காசிய விளையாட்டுகளில் மூன்று முறை தங்கம் வென்றுள்ள பெர்த்தியர் புள்ளிக் கணக்கின்படி ஒலிம்பிக் விளையாட்டுகளுக்குத் தகுதிபெற்றார்.
வாட்சண்டையில் பெண்கள் ஃபாய்ல் பிரிவில் பெர்த்தியர் உலகத் தரவரிசையில் 28வது இடத்தில் இருக்கிறார்.
உலகில் ஆகச் சிறநதீ நான்கு நாடுகளின் குழுக்கள் நேரடியாக ஒலிம்பிக் விளையாட்டுகளுக்குத் தகுதிபெறும். அதற்குப் பிறகு ஐரோப்பிய, ஆசிய மற்றும் ஓஷினிய, அமெரிக்க, ஆப்பிரிக்க வட்டாரங்கள் ஒவ்வொன்றிலும் ஆகச் சிறந்த குழுக்கள் தகுதிபெறும்.
அதன் பிறகு குழுக்களில் இடம்பெற்றுத் தகுதிபெறாத ஆகச் சிறந்த வாட்சண்டை வீரர்கள் தனிநபர்களாக ஒலிம்பிக் விளையாட்டுகளுக்கு முன்னேறுவர்.
பெர்த்தியர், 2021ஆம் ஆண்டில் ஒலிம்பிக்கிற்குத் தகுதிபெற்ற முதல் சிங்கப்பூர் வாட்சண்டை வீரர் ஆவார்.