லண்டன்: மான்செஸ்டர் யுனைடெட் அணியின் தலைமை பொறுப்பை தாம் ஏற்கவுள்ளதாக வெளியாகும் செய்திகளை இங்கிலாந்து ஆண்கள் காற்பந்து அணியின் நிர்வாகி கேரத் சவுத்கேட் மறுத்துள்ளார். இதுபோன்ற வதந்திகள் தம்மை அவமதிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
“எனது கவனம் எல்லாம் யூரோ கிண்ணத்தின் மீதுதான் உள்ளது. அது முடிந்த பிறகுதான் என் காற்பந்து எதிர்காலம் குறித்து சிந்திக்க உள்ளேன்,” என்று சவுத்கேட் தெரிவித்தார்.
இங்கிலாந்து அணிக்கு இன்னும் சில ஆண்டுகள் நிர்வாகியாகத் தொடர சவுத்கேட்டுக்கு ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டுள்ளன. இருப்பினும் சவுத்கேட் அந்த ஒப்பந்தங்களை கையெழுத்திடவில்லை.
இங்கிலாந்து அணிக்கும் சவுத்கேட்டுக்கும் தற்போதுள்ள ஒப்பந்தம் 2024ஆம் ஆண்டு இறுதியில் நிறைவடைகிறது.
தற்போது மான்செஸ்டர் யுனைடெட் அணியின் நிர்வாகியாக எரிக் டென் ஹாக் உள்ளார். இந்தப் பருவத்தில் டென் ஹாக் தலைமையில் யுனைடெட் குழு எதிர்பார்த்த அளவு வெற்றிகளைக் குவிக்கவில்லை. புள்ளிப்பட்டியலில் தற்போது யுனைடெட் ஆறாவது இடத்தில் உள்ளது.