சென்னை: இந்திய பிரிமியர் லீக் கிரிக்கெட்டின் (ஐபிஎல்) 17வது பருவத்தின் போட்டிகள் மார்ச் 22ஆம் தேதி தொடங்கின. பொதுத் தேர்தல் காரணமாக இந்தத் தொடருக்கான முதற்கட்ட அட்டவணையை மட்டும் பிசிசிஐ வெளியிட்டு இருந்தது. இதில் 21 ஆட்டங்கள் மட்டும் இடம் பெற்றிருந்தன. இந்த ஆட்டங்கள் வரும் ஏப்ரல் 7ஆம் தேதியுடன் முடிவடைகின்றன.
இந்நிலையில் எஞ்சிய ஆட்டங்களுக்கான அட்டவணையை ஐபிஎல் நிர்வாகம் நேற்று வெளியிட்டது. இதன்படி மே 24ஆம் தேதி 2வது தகுதி சுற்று ஆட்டமும், 26ஆம் தேதி இறுதிப் போட்டியும் சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெறுகின்றன.
முதல் தகுதி சுற்று ஆட்டம், எலிமினேட்டர் ஆகியவை அகமதாபாத்தில் நடத்தப்பட உள்ளது. இந்த ஆட்டங்கள் முறையே மே 21 மற்றும் 22ஆம் தேதிகளில் நடைபெறுகின்றன. 2வது கட்ட அட்டவணையின்படி தொடக்க ஆட்டத்தில் ஏப்ரல் 8ஆம் தேதி இரவு 7.30 மணிக்கு சிஎஸ்கே, கோல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியுடன் சேப்பாக்கம் மைதானத்தில் மோதுகிறது என்று தெரிவிக்கப்பட்டது.