லண்டன்: இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்தாட்டத்தில் மான்செஸ்டர் யுனைடெட்டிடமிருந்து வெற்றியைப் பறித்துக்கொண்டது செல்சி.
இந்த ஆட்டத்தில் 3-2 எனும் கோல் கணக்கில் யுனைடெட் முன்னணி வகித்தது. ஆனால் கடைசி சில நிமிடங்களில் இரண்டு கோல்களைப் போட்டு செல்சி 4-3 எனும் கோல் கணக்கில் வென்றது.
90வது நிமிடத்துக்குப் பிறகு 11வது நிமிடத்தில் செல்சியின் வெற்றி கோல் விழுந்தது. இங்கிலிஷ் பிரிமியர் லீக் வரலாற்றில் எந்த ஆட்டத்திலும் வெற்றி கோல் இவ்வளவு தாமதமாக விழுந்ததில்லை.
முதலில் செல்சி இரண்டு கோல்களைப் போட்டு முன்னுக்குச் சென்றது. விட்டுக்கொடுக்காமல் ஆடி 67வது நிமிடத்துக்குள் யுனைடெட் முன்னுக்குச் சென்றது.
ஆட்டம் நிறைவடையும் தருவாயில் கொல் பால்மர் இரண்டு கோல்களைப் போட்டு செல்சியை வெல்லச் செய்தார். இந்த ஆட்டத்தில் பால்மர் மூன்று கோல்களைப் போட்டார். செல்சியின் மற்றொரு கோலைப் போட்டவர் கொனர் கேலகர்.
யுனைடெட்டுக்கு அலெஹாண்ட்ரோ கர்னாச்சோ இரண்டு கோல்களையும் புரூனோ ஃபெர்னாண்டஸ் ஒரு கோலையும் போட்டனர்.