சிங்கப்பூரின் தங்க மங்கை என்று கொண்டாடப்படும் சாந்தி பெரேரா இப்போது பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு உடற்தகுதியுடன் இருப்பதற்காகப் போராடி வருகிறார்.
அமெரிக்காவில் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது அவருக்குக் காயம் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சின் கேள்விகளுக்குப் பதிலளித்த சிங்கப்பூர் தடகளப் போட்டிகள் சங்கம், 27 வயது சாந்திக்கு முழங்காலில் காயம் ஏற்பட்டதைத் திங்கட்கிழமை உறுதிப்படுத்தியது.
நான்கு நாள்களுக்கு முன்பு சிங்கப்பூரில் சாந்தி எம்ஆர்ஐ பரிசோதனை செய்துகொண்டதாக அறியப்படுகிறது.
ஜூலை 26 முதல் ஆகஸ்ட் 11 வரை நடைபெறும் பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகளுக்கு சாந்தி தயாராகி வந்தார். அதற்காக பிப்ரவரி முதல் வாரத்திலிருந்து அமெரிக்காவின் ஃபுளோரிடா மாநிலத்தில் நடைபெறும் இரண்டு மாதப் பயிற்சி முகாமில் கலந்துகொண்டார்.
காயம் குறித்துத் தகவல் பெற சாந்தியின் பயிற்றுவிப்பாளர் லூயிஸ் குன்ஹாவைத் தொடர்புகொண்டபோது, மேல்விவரம் தர அவர் மறுத்துவிட்டார்.
ஆனால், பாரிஸ் ஒலிம்பிக் போட்டியை சாந்தி தவறவிட வேண்டிய கட்டாயம் ஏற்படலாம் என்ற அச்சத்தைத் திரு குன்ஹா தணித்தார். மேலும், ஒலிம்பிக் போட்டியில் சாந்தி பங்கேற்பாரா மாட்டாரா என்பதைத் திட்டவட்டமாகக் கூற காலம் கனியவில்லை என்றும் திரு குன்ஹா சொன்னார்.