கோல்கத்தா: ஐபிஎல் கிரிக்கெட் ஆட்டத்தில் கோல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எட்டு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றுள்ளது பஞ்சாப் கிங்ஸ் அணி.
முதலில் பந்தடித்த கோல்கத்தா, ஆறு விக்கெட்டுகள் இழப்பிற்கு 261 ஓட்டங்களைக் குவித்தது. பின்னர் 18.4 ஓவர்களில் பஞ்சாப் வெற்றி இலக்கை அடைந்தது.
டி20 ஆட்டம் ஒன்றில் இவ்வளவு பெரிய வெற்றி இலக்கை இதற்கு முன்பு எந்த அணியும் அடைந்ததில்லை.
அபாரமான முறையில் சதமடித்த பஞ்சாபின் ஜானி பேர்ஸ்டோ தனது அணி வரலாறு படைக்க உறுதுணையாக இருந்தார். 48 பந்துகளில் 108 ஓட்டங்களை விளாசினார் பேர்ஸ்டோ.
இறுதியில் பஞ்சாப் இரண்டு விக்கெட்டுகள் இழப்பிற்கு 262 ஓட்டங்களை எடுத்தது.
இந்த அமோகமான வெற்றியைத் தொடர்ந்து பஞ்சாப்பைப் பெரிதும் பாராட்டினார் அணித் தலைவர் சாம் கரன்.
“கிரிக்கெட், பேஸ்பாலாக மாறிவருகிறது,” என்றார் அவர்.
“கடந்த சில வாரங்கள் எங்களுக்கு சவாலாக இருந்தன. ஆட்டத்தின் முடிவை ஓரங்கட்டுங்கள்! இந்த வெற்றி எங்களுக்குக் கிடைக்கவேண்டியதுதான்,” என்று கரன் பெருமைபட்டார்.
தற்போதைய ஐபிஎல் பருவத்தில் பல அணிகள் அதிக ஓட்டங்களைக் குவித்துவருகின்றன. அதுபற்றிக் கேட்கப்பட்டபோது கரன், “பில்வேறு அம்சங்களைக் காணமுடிகிறது. வீரர்களால் அதிக நேரத்துக்கு ஓட்டங்களை விளாச முடிகிறது,” என்று குறிப்பிட்டார்.
கோல்கத்தாவுக்கு எதிரான ஆட்டத்தில் பேர்ஸ்டோ மட்டுமின்றி ஷஷாங்க் சிங்கும் சிறப்பாக விளையாடினார். இருவரையும் பாராட்டிப் பேசினார் கரன்.
28 பந்துகளில் 68 ஓட்டங்களை எடுத்தார் ஷஷாங்க். பேர்ஸ்டோ, ஷஷாங்க் இருவரும் ஆட்டம் இழக்கவில்லை.
இவ்வாண்டு ஜூன் மாதம் டி20 உலகக் கிண்ணப் போட்டி நடைபெறவுள்ளது. அதில் பங்கேற்கும் இங்கிலாந்து அணியில் இடம்பெறுவதற்கான வாய்ப்புகளை பேர்ஸ்டோ அதிகரித்துக்கொண்டுள்ளதாக நம்பப்படுகிறது.