லண்டன்: இங்கிலிஷ் பிரிமியர் லீக் விருதுக்கான போட்டியில் தீவிரமாக ஈடுபட்டுள்ள ஆர்சனல், ஞாயிற்றுக்கிழமையன்று (ஏப்ரல் 28) பரம வைரியான டாட்டன்ஹம் ஹாட்ஸ்பருடன் மோதவுள்ளது.
லீக் பருவத்தில் சில ஆட்டங்களே எஞ்சியிருக்கும் வேளையில் விளையாட்டை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்லுமாறு தனது குழுவுக்கு ஊக்கமளித்துள்ளார் ஆர்சனல் நிர்வாகி மிக்கெல் அர்ட்டெட்டா.
“ஸ்பர்ஸ் தற்போது பெரிய அளவில் போட்டி தந்துவருகிறது. இத்தகைய சூழலில் ஒன்றைத்தான் செய்யவேண்டும். போட்டியில் தீவிரமாக இறங்கவேண்டும்,” என்று வெள்ளிக்கிழமையன்று (ஏப்ரல் 26) கூறினார் அர்ட்டெட்டா.
“கடந்த இரு ஆட்டங்களின் முடிவுகள் எங்களுக்கு மிகச் சிறப்பாக அமைந்தன. அவை அனைவரின் நம்பிக்கைக்கும் மெருகூட்டின. நாங்கள் நல்ல நிலையில் இருக்கிறோம். வாகை சூட என்ன செய்யவேண்டும் என்பதை நாங்கள் அறிவோம். அந்த வகையில் விளையாட்டை அடுத்த கட்டத்துக்குக் கொண்டுசெல்லவேண்டும்,” என்றும் அவர் சொன்னார்.
லீக் பட்டியலில் ஆர்சனல், லீக் விருதுக்கான போட்டியில் ஈடுபட்டுள்ள மற்றொரு குழுவான மான்செஸ்டர் சிட்டியைவிட ஒரு புள்ளி அதிகம் பெற்றுள்ளது. எனினும், சிட்டியைவிட ஓர் ஆட்டம் கூடுதலாக விளையாடியிருக்கிறது ஆர்சனல்.
இந்நிலையில், தனது குழுவின் முன்னேற்றத்தில்தான் தனக்கு கவனம் இருப்பதாகவும் ஆர்சனலின் லீக் விருது வேட்டைக்கு இடையூறு விளைவிப்பது தங்களின் எண்ணம் இல்லை என்றும் ஸ்பர்ஸ் நிர்வாகி ஆஞ்சி பொஸ்டக்கொக்லு கூறியுள்ளார்.
“பரம வைரிகளை வெல்வதன் முக்கியத்துவத்தை நான் அறிவேன். அதேவேளை, மற்றவரின் இழப்பு நமக்கு ஊக்கமாக இருக்கக்கூடாது என்பது எனது கருத்து,” என்றார் பொஸ்டக்கொக்லு.
லீக்கின் நடப்பு வெற்றியாளரான மான்செஸ்டர் சிட்டி, ஞாயிற்றுக்கிழமையன்று நொட்டிங்கம் ஃபாரஸ்ட்டைச் சந்திக்கிறது.
லீக்கில் சிட்டிக்கு எஞ்சிள்ள ஆறு ஆட்டங்கள் ஒவ்வொன்றும் ஓர் இறுதியாட்டத்துக்குச் சமம் என்று எடுத்துரைத்துள்ளார் சிட்டி நட்சத்திரம் ஃபில் ஃபோடன்.
தொடர்ந்து நான்காவது பருவமாக லீக் விருதை வெல்லும் இலக்கை சிட்டி கொண்டுள்ளது. இதுவரை எந்தக் குழுவும் இதைச் செய்ததில்லை. எஞ்சிய அனைத்து ஆட்டங்களிலும் சிட்டி வென்றால் அவ்வாறு நிகழ்வது உறுதி.
“இன்னும் ஆறு இறுதியாட்டங்கள் எஞ்சியுள்ளன. எனது குழுவுக்குத் தொடர்ந்து உதவ முயற்சி செய்வது ஒன்றுதான் எனது எண்ணமாக உள்ளது,” என்றார் ஃபோடன்.
இப்பருவம் மொத்தம் 24 கோல்களைப் போட்டிருக்கிறார் ஃபோடன்.