கோல்கத்தா: மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் கிரிக்கெட் ஆட்டத்தில் கோல்கத்தா நைட் ரைடர்ஸ் 18 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வென்றது.
இந்த ஆட்டத்தில் மும்பை அணியின் அணுகுமுறையை முன்னாள் இந்திய வீரர் வீரேந்தர் சேவாக் சாடியுள்ளார். மும்பையின் ரோகித் சர்மா, சூர்யகுமார் யாதவ் இருவரும் வெளியேற்றப்பட்டதை சேவாக் குறிப்பிட்டுப் பேசினார்.
“சிறப்பாகப் பந்து வீசுபவர்களை எதிர்கொள்ளும்போது பொறுமையாகப் பந்தடிக்கவேண்டும். இரண்டு விக்கெட்டுகளும் விழாமல் இருந்திருந்தால் ரோகித் சர்மா, சூர்யகுமார் யாதவ் இருவரும் ஓர் ஓவர் எஞ்சியிருக்கும்போதே ஆட்டத்தை வென்று தந்திருப்பர். வைபவ் அரோரா, மிட்செல் ஸ்டார்க், ஆண்ட்ரே ரசல், ஹர்ஷித் ராணா ஆகியோர் பந்துவீச வேண்டியிருந்தது. சுழற்பந்து வீச்சாளர்களைச் சமாளித்து விக்கெட்டுகளை இழக்காமல் இருந்திருந்தால் மும்பை வென்றிருக்கும்,” என்றார் சேவாக்.
முதலில் பந்தடித்த கோல்கத்தா ஏழு விக்கெட் இழப்பிற்கு 157 ஓட்டங்களை எடுத்தது. பிறகு மும்பை எட்டு விக்கெட் இழப்பிற்கு 139 ஓட்டங்களை எடுத்தது.
24 பந்துகளில் 19 ஓட்டங்களை மட்டுமே எடுத்தார் ரோகித். சூர்யகுமார் யாதவ் 14 பந்துகளில் 11 ஓட்டங்களை மட்டுமே எடுத்தார்.