மெல்பர்ன்: ஆஸ்திரேலிய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் முன்னாள் தொடக்க ஆட்டக்காரரான ஜோ பர்ன்ஸ், 34, இத்தாலி அணிக்காக விளையாடவுள்ளார்.
கடந்த பிப்ரவரி மாதம் பர்ன்சின் சகோதரர் உயிரிழந்துவிட்டார். அவருக்கு மரியாதை செலுத்தும் வகையில் இத்தாலி அணியில் பர்ன்ஸ் இணைந்துள்ளார்.
“புது வாழ்க்கையைத் தொடங்குவதற்காக என் தாத்தாவும் பாட்டியும் இத்தாலியைவிட்டு வெளியேறியபோது அவர்கள் கொண்டிருந்த துணிச்சலையும் கடப்பாட்டையும் நான் அடிக்கடி நினைத்துக்கொள்வேன். இத்தாலி அணிக்காக விளையாடுவதில் நான் பெருமைகொள்கிறேன்,” என்று பர்ன்ஸ் தெரிவித்துள்ளார்.
வரும் 2026ஆம் ஆண்டு நடக்கவுள்ள டி20 உலகக் கிண்ணப் போட்டிகளுக்கு இத்தாலி அணியைத் தகுதிபெறச் செய்வதே பர்ன்சின் இலக்கு.
இத்தாலி அணி இதற்குமுன் எந்த ஓர் உலகக் கிண்ணத் தொடரிலும் விளையாடியதில்லை. வரும் சனிக்கிழமை (ஜூன் 1)தொடங்கவுள்ள டி20 உலகக் கிண்ணப் போட்டிகளுக்கான ஐரோப்பிய கண்டத் தகுதிச் சுற்றில் அவ்வணி மூன்றாமிடத்தைப் பிடித்தது.
கடந்த 2014ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய அணிக்காக அறிமுகமான பர்ன்ஸ், அவ்வணி சார்பில் 23 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார்.

