வரலாற்று சாதனை படைத்த அமெரிக்க அணியில் முன்னாள் இந்திய வீரர்

2 mins read
e02a962d-d7b9-4682-ad80-f7b34e01ec53
அமெரிக்க அணியின் சௌரப் நெட்ராவல்கர், 4 ஓவர்களில் 18 ஓட்டங்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். - படங்கள்: இணையம்

டாலஸ்: டி20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் வியாழக்கிழமை நடைபெற்ற போட்டியில் பாகிஸ்தான் மற்றும் அமெரிக்க அணிகள் மோதின. பரபரப்பாக நடைபெற்ற இந்தப் போட்டி சூப்பர் ஓவர் வரை சென்றது. சூப்பர் ஓவரில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி அமெரிக்கா வரலாற்று சாதனையைப் பதிவு செய்தது.

சூப்பர் ஓவரில் முதலில் பந்தடித்த அமெரிக்கா, ஒரு விக்கெட் இழந்து 18 ஓட்டங்களைக் குவித்தது. அடுத்து வந்த பாகிஸ்தான் அணி ஒரு விக்கெட் இழந்து 13 ஓட்டங்களை மட்டுமே எடுத்தது. இதன் மூலம் பாகிஸ்தான் அணி படுதோல்வியைச் சந்தித்தது.

அமெரிக்கா வெற்றி பெற அந்த அணியின் சௌரப் நெட்ராவல்கர் முக்கிய பங்காற்றினார். சிறப்பாக பந்துவீசிய இவர் 4 ஓவர்களில் 18 ஓட்டங்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். வியாழக்கிழமை போட்டியில் அபார வெற்றி பெற்றதை அடுத்து, சௌரப் நெட்ராவல்கர் இந்திய அணிக்காக விளையாடியது அம்பலமாகி இருக்கிறது.

2010ஆம் ஆண்டு நடைபெற்ற 19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் சௌரப் இந்திய அணிக்காக விளையாடி இருக்கிறார். யு19 இந்திய அணியில் இடம்பெற்றிருந்த சௌரப் 2010ல் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் 5 ஓவர்களை பந்துவீசி 16 ஓட்டங்களைக் கொடுத்து ஒரு விக்கெட் வீழ்த்தினார். இந்தப் போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றது.

அந்த வகையில், 14 ஆண்டுகள் கழித்து அணி மாறிய சௌரப், அமெரிக்க கிரிக்கெட் அணியில் களமிறங்கி டி20 உலகக் கிண்ணத் தொடரில் பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணி தோல்வியடைய முக்கிய காரணமாக விளங்கியுள்ளார்.

முன்னதாக, யு19 போட்டியில் இந்தியாவிடம் தோல்வியுற்ற பாகிஸ்தான் அணியிலும் பாபர் அசாம் இடம்பெற்றிருந்த நிலையில், தற்போதைய போட்டியில் பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணி அமெரிக்காவிடம் தோல்வி அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

குறிப்புச் சொற்கள்