மியூனிக்: ருமேனியாவை 3-0 எனும் கோல் கணக்கில் வீழ்த்தி ஐரோப்பியக் கிண்ண காற்பந்துப் போட்டியின் காலிறுதிச் சுற்றுக்கு நெதர்லாந்து தகுதி பெற்றுள்ளது.
இந்த ஆட்டம் சிங்கப்பூர் நேரப்படி ஜூலை 2ஆம் தேதி நள்ளிரவு 12 மணிக்கு நடைபெற்றது.
ஆட்டத்தின் 20வது நிமிடத்தில் நெதர்லாந்தின் கோடி கெக்போ அனுப்பிய பந்து, ருமேனிய கோல்காப்பாளரை மின்னல் வேகத்தில் கடந்து சென்று வலையைத் தொட்டது.
அதனைத் தொடர்ந்து, நெதர்லாந்து தாக்குதலைத் தீவிரப்படுத்தியது.
ஆனால் கிடைத்த பொன்னான வாய்ப்புகளை அக்குழுவால் கோலாக்க முடியவில்லை.
இடைவேளையின்போது 1-0 எனும் கோல் கணக்கில் நெதர்லாந்து முன்னிலை வகித்தது.
பிற்பாதி ஆட்டத்திலும் நெதர்லாந்து ஆதிக்கம் செலுத்தியது.
ஆட்டத்தின் 83வது நிமிடத்திலும் ஆட்டம் முடியும் கட்டத்திலும் நெதர்லாந்தின் டொன்யேல் மாலேன் இரண்டு கோல்களைப் போட்டு ருமேனியாவின் கதையை முடித்து வைத்தார்.