டாக்கா: பங்ளாதேஷின் ஆகச் சிறந்த சதுரங்க விளையாட்டாளரான ஸியாவுர் ரகுமான், ஆட்டத்தின் நடுவில் உயிரிழந்தார்.
வெள்ளிக்கிழமையன்று (ஜூலை 5) நடைபெற்ற தேசிய போட்டியின் ஆட்டம் ஒன்றில் 50 வயதான ஸியாவுர் ரகுமான், பக்கவாதத்துக்கு ஆளானதால் சதுரங்க பலகை மேல் மயங்கி மாண்டதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
மற்றொரு பங்ளாதேஷ் சதுரங்க வீரரான எனாமுல் ஹொசைனுக்கு எதிரான 12ஆம் சுற்று ஆட்டத்தில் ஸியாவுர் மயங்கியதாக பங்ளாதேஷ் சதுரங்கக் கூட்டமைப்புப் பொதுச் செயலாளர் ஷகாப் உதின் ஷமிம் ஏஎஃப்பி செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார். பின்னர் தலைநகர் டாக்காவில் உள்ள மருத்துவமனை ஒன்றில் ஸியாவுர் உயிரிழந்தது உறுதிப்படுத்தப்பட்டதாக அவர் கூறினார்.
ஸியாவுர் மயங்கிய பிறகு விரைவாக அரங்கில் இருந்த விளையாட்டாளர்களும் அதிகாரிகளும் அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர் என்று ஷமிம் சொன்னார்.
ஸியாவுர் மோசமான பக்கவாதத்துக்கு ஆளானதைத் தாங்கள் புரிந்துகொள்ள சில நொடிகள் ஆனதாக எனாமுல் கூறினார். ஸியாவுர் விளையாடும்போது அவரின் உடல்நிலை சரியில்லாததுபோல் தெரியவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.