தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

இறுதி ஆட்டத்துக்குக் குறிவைக்கும் இங்கிலாந்து, நெதர்லாந்து

2 mins read
644733f0-bf4f-4d2e-bcbd-a87803785265
இறுதி ஆட்டத்துக்குத் தகுதி பெற இங்கிலாந்துக்கும் நெதர்லாந்துக்கும் இடையே கடுமையான போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆட்டக்காரர்கள் திடலில் மோத இருக்கும் நிலையில், இங்கிலாந்தின் தலைமைப் பயிற்றுவிப்பாளர் கேரத் சவுத்கேட்டுக்கும் (இடது) நெதர்லாந்தின் தலைமைப் பயிற்றுவிப்பாளர் ரானல்ட் கூமனுக்கும் இடையே வியூகப் போர் நடைபெறுகிறது. - படம்: ஏஎஃப்பி

ஐரோப்பியக் கிண்ண காற்பந்துப் போட்டியின் அரையிறுதி ஆட்டத்தில் இங்கிலாந்தும் நெதர்லாந்தும் மோதுகின்றன. இந்த ஆட்டம் சிங்கப்பூர் நேரப்படி ஜூலை 11ஆம் தேதி அதிகாலை 3 மணிக்கு ஜெர்மனியின் டோர்ட்மண்ட் நகரில் நடைபெறுகிறது.

தலைமைப் பயிற்றுவிப்பாளர் கேரத் சவுத்கேட் தலைமையின்கீழ் விளையாடும் இங்கிலாந்து முதல் சுற்றில் ஒரே ஓர் ஆட்டத்தில் வெற்றி பெற்றது. இரண்டு ஆட்டங்களில் சமநிலை கண்டது.

காலிறுதிக்கு முந்தைய ஆட்டத்தில் தோல்வியின் பிடியிலிருந்து அது நூலிழையில் தப்பியது.

அந்த ஆட்டத்தில் சிலோவாக்கியா 25வது நிமிடத்தில் கோல் போட்டு முன்னிலை வகித்தது.

ஆட்டம் முடிய சில வினாடிகள் எஞ்சியிருந்தபோது இங்கிலாந்து ஆட்டத்தைச் சமன் செய்தது.

பிறகு கூடுதல் நேரத்தில் வெற்றி கோலைப் போட்டு காலிறுதிக்குத் தகுதி பெற்றது.

காலிறுதியில் சுவிட்சர்லாந்துக்கு எதிராக ஆட்டம் 1-1 எனும் கோல் கணக்கில் சமநிலையில் முடிந்தது. பெனால்டி ஷுட்அவுட்டில் 5-3 எனும் கோல் கணக்கில் இங்கிலாந்து வென்றது.

மறுமுனையில், நெதர்லாந்து அதன் முதல் ஆட்டத்தில் போலந்தை 2-1 எனும் கோல் கணக்கில் வீழ்த்தியது.

இரண்டாவது ஆட்டத்தில் அது பிரான்சுடன் மோதியது. இந்த ஆட்டம் கோலின்றி சமநிலையில் முடிந்தது.

முதல் சுற்றின் கடைசி ஆட்டத்தில் எதிர்பாராத விதமாக ஆஸ்திரியாவிடம் நெதர்லாந்து 3-2 எனும் கோல் கணக்கில் தோற்றது.

முதல் சுற்று ஆட்டத்தில் நெதர்லாந்து விளையாடிய விதம் திருப்தி அளிக்கும் வகையில் இல்லாதபோதிலும் காலிறுதிக்கு முந்தைய ஆட்டத்தில் அது கோல் மழை பொழிந்தது.

ருமேனியாவை அது 3-0 எனும் கோல் கணக்கில் வீழ்த்தியது.

காலிறுதி ஆட்டத்தில் வலிமைமிக்க துருக்கியை அது 2-1 எனும் கோல் கணக்கில் போராடி வென்றது.

இந்நிலையில், இறுதி ஆட்டத்துக்குத் தகுதி பெற இங்கிலாந்தும் நெதர்லாந்தும் மிகுந்த முனைப்புடன் உள்ளன.

அரையிறுதி ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. இரு குழுக்களும் விட்டுக்கொடுக்காமல் போராடும் என்பது உறுதி. எனவே, ரசிகர்களின் கண்களுக்கு காற்பந்து விருந்து காத்திருக்கிறது என்று சொன்னால் அது மிகையாகாது.

குறிப்புச் சொற்கள்