டோர்ட்மண்ட்: அரையிறுதி ஆட்டம் முடிய வினாடிகள் மட்டுமே இருந்தபோது ஓலி வாட்கின்ஸ் போட்ட கோல் இங்கிலாந்தின் வெற்றி கோலாக அமைந்தது. இதன்மூலம் இங்கிலாந்து இறுதி ஆட்டத்துக்குத் தகுதி பெற்றுள்ளது.
சிங்கப்பூர் நேரப்படி ஜூலை 11ஆம் தேதி அதிகாலை 3 மணிக்கு நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில் இங்கிலாந்தும் நெதர்லாந்தும் மோதின.
ஆட்டத்தின் 7வது நிமிடத்தில் ஸாவி சிமன்ஸ் போட்ட அபார கோல் நெதர்லாந்தை முன்னிலைக்குக் கொண்டு சென்றது.
ஆட்டத்தின் தொடக்கத்திலேயே நெதர்லாந்து போட்ட கோல் இங்கிலாந்து ரசிகர்களை அதிர்ச்சியில் உறைய வைத்தது.
இருப்பினும், மனந்தளராமல் கோல் வேட்டையில் இறங்கிய இங்கிலாந்து, 11 நிமிடங்கள் கழித்து ஆட்டத்தைச் சமன் செய்தது.
கிடைத்த பெனால்டி வாய்ப்பை ஹேரி கேன் கோலாக்கினார்.
ஐந்து நிமிடங்கள் கழித்து, இங்கிலாந்து அதன் இரண்டாவது கோலைப் போட்டிருக்கக்கூடும்.
ஆனால் இங்கிலாந்தின் ஃபில் ஃபோடன் வலை நோக்கி அனுப்பிய பந்தை நெதர்லாந்தின் டென்சேல் டம்ஃபிரிஸ், அதை கோல் கோட்டிலேயே தடுத்து நிறுத்தி வலைக்குள் செல்லாதபடி பார்த்துக்கொண்டார்.
தொடர்புடைய செய்திகள்
அதையடுத்து, நெதர்லாந்திற்கு கிடைத்த கார்னர் வாய்ப்பு மூலம் நெதர்லாந்துக்கு கோல் போடும் வாய்ப்பு கிடைத்தது.
டம்ஃபிரிஸ் தலையால் முட்டிய பந்து கோல் கம்பம் மீது பட்டு வெளியானது.
இங்கிலாந்தும் அதேபோன்ற கோல் போடும் வாய்ப்பை நூலிழையில் தவறவிட்டது.
ஃபோடன் அனுப்பிய பந்து வலையை நோக்கி அழகாக வளைந்து சென்றது. ஆனால் அது கோல் கம்பம் மீது உரசி வெளியானது.
சாக்கா அனுப்பிய பந்து வலையைத் தொட்டபோது இங்கிலாந்து ரசிகர்கள் கொண்டாடத் தொடங்கினர். ஆனால் ஆஃப்சைட் காரணமாக அந்த கோல் நிராகரிக்கப்பட்டது.
ஆனால் ஆட்டம் முடியும் கட்டத்தில் ஓலி வாட்கின்ஸ் போட்ட கோல் நெதர்லாந்தின் மனதை சுக்குநூறாக உடைக்க, இங்கிலாந்து கொண்டாட்ட மழையில் நனைந்தது.
நெதர்லாந்து, 1988ஆம் ஆண்டில் ஐரோப்பியக் கிண்ணத்தை ஏந்தியது. அதையடுத்து, அப்போட்டியில் அது நான்கு முறை அரையிறுதி வரை சென்று தோல்வியின் பிடியில் சிக்கியுள்ளது.
இங்கிலாந்து முதல்முறையாக சொந்த மண்ணில் இல்லாது வேறொரு நாட்டில் நடைபெறும் முக்கிய காற்பந்துப் போட்டியின் இறுதி ஆட்டத்துக்குத் தகுதி பெற்றுள்ளது.
இதற்கிடையே, இறுதி ஆட்டத்தில் வெற்றி பெற்று கிண்ணம் ஏந்த இங்கிலாந்துக் குழுவுக்குப் பிரிட்டிஷ் மன்னர் சார்ல்ஸ் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
ஆனால் அதற்காக மீண்டும் ஆட்டத்தின் இறுதிக் கட்டம் வரை காத்திருக்கும் நிலை அல்லது பெனால்டி ஷுட்அவுட் ஏற்படாமல் இருந்தால் நன்றாக இருக்கும் என்று அவர் விருப்பம் தெரிவித்தார்.