லண்டன்: இங்கிலாந்துக் காற்பந்துக் குழுவின் அடுத்த தலைமைப் பயிற்றுவிப்பாளராக எடி ஹாவ் நியமிக்கப்படக்கூடும் என்று பேசப்படுகிறது.
இதுகுறித்து நியூகாசல் யுனைடெட்டின் நிர்வாகியாகப் பதவி வகிக்கும் எடி ஹாவ் கருத்து தெரிவித்துள்ளார்.
நியூகாசல் குழுவைத் தமக்கு மிகவும் பிடிக்கும் என்றார் அவர்.
அக்குழுவின் நிர்வாகியாகத் தாம் முழு கடப்பாட்டுடன் செயல்பட்டு வருவதாக அவர் கூறினார்.
அங்கு மகிழ்ச்சியுடன், ஆதரவு கிடைக்கிறது என்ற திருப்தியுடன் இருக்கும்வரை நியூகாசலின் நிர்வாகியாகத் தொடர விரும்புவதாக அவர் தெரிவித்தார்.
“நியூகாசலின் நிர்வாகியாக இருப்பதைத் தவிர்த்து வேறு எந்த சிந்தனையும் எனக்கு இல்லை. இப்பதவி எனக்குக் கிடைத்திருக்கும் கௌரவம் எனக் கருதுகிறேன். அங்கே மேலும் பல ஆண்டுகள் இருக்க விரும்புகிறேன். என் தலைமையின்கீழ் நியூகாசல் கிண்ணம் வெல்ல வேண்டும் என்ற இலக்கைக் கொண்டுள்ளேன்,” என்று எடி ஹாவ் தெரிவித்தார்.
அண்மையில் நடந்து முடிந்த ஐரோப்பியக் காற்பந்துப் போட்டியில், இறுதி ஆட்டம் வரை சென்ற இங்கிலாந்துக் குழு, 2-1 எனும் கோல் கணக்கில் ஸ்பெயினிடம் தோல்வி அடைந்து கிண்ணம் ஏந்தும் வாய்ப்பை நழுவவிட்டது.
அதையடுத்து, இங்கிலாந்தின் தலைமைப் பயிற்றுவிப்பாளர் பொறுப்பிலிருந்து கேரத் சவுத்கேட் விலகினார்.
தொடர்புடைய செய்திகள்
இங்கிலாந்துக் காற்பந்துக் குழுவின் புதிய தலைமைப் பயிற்றுவிப்பாளரைத் தேர்ந்தெடுக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.