பாரிஸ்: இவ்வாண்டின் ஒலிம்பிக் விளையாட்டுகளில் பெண்கள் 100 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் செயின்ட் லூசியாவின் ஜூலியன் ஆல்ஃபிரெட் எதிர்பாரா விதமாகத் தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.
இது, ஒலிம்பிக் வரலாற்றில் செயின்ட் லூசியா வென்றுள்ள முதல் பதக்கமாகும்.
சனிக்கிழமை (ஆகஸ்ட் 3) நடைபெற்ற ஒலிம்பிக் பெண்கள் 100 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் அமெரிக்காவின் ஷா’காரி ரிச்சர்ட்சன் வெல்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இதற்கு முன்பு எந்த முக்கியப் போட்டியிலும் பதக்கம் வெல்லாத ஆல்ஃபிரெட், ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி தந்தார்.
10.72 விநாடிகளில் ஆல்ஃபிரெட் பந்தயத்தை முடித்து தங்கம் வென்றார். 10.87 விநாடிகள் எடுத்துக்கொண்ட ரிச்சர்ட்சன் வெள்ளிப் பதக்கத்தை வென்றார்.
வெண்கலப் பதக்கம், மற்றோர் அமெரிக்க வீராங்கனையான மெலிசா ஜெஃபர்சனுக்குச் சென்றது. அவர் எடுத்துக்கொண்ட நேரம் 10.92 விநாடிகள்.
ஒலிம்பிக் பெண்கள் 100 மீட்டர் பந்தயத்தில் அமெரிக்கா 1996ஆம் ஆண்டுக்குப் பிறகு தங்கம் வென்றதில்லை. அந்த ஆண்டு அமெரிக்காவின் கெயில் டெவர்ஸ் வெற்றிபெற்றார்.
இப்பிரிவின் தற்போதைய நடப்பு உலக வெற்றியாளரான ரிச்சர்ட்சன், அமெரிக்காவின் 28 ஆண்டு ஏக்கத்தைத் தீர்த்துவைப்பார் எனப் பரவலாக எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் முட்டுக்கட்டையாக இருந்து செயின்ட் லூசியாவுக்குப் பெருமை சேர்த்தார் ஆல்ஃபிரெட்.
ரிச்சர்ட்சன் ஈடுகொடுக்க முடியாத வகையில் வேகமாக ஓடி முடித்தார், ஆல்ஃபிரெட்.