துபாய்: சிறந்த வீரர்கள் அடங்கிய, கடந்த 2023ஆம் ஆண்டிற்கான டி20 அணியை அனைத்துலக கிரிக்கெட் மன்றம் (ஐசிசி) அறிவித்துள்ளது.
இந்திய அணியின் சூர்யகுமார் யாதவைத் தலைவராகக் கொண்ட அவ்வணியில் ரவி பிஷ்னோய், யஷஸ்வி ஜெய்ஸ்வால், அர்ஷ்தீப் சிங் என மேலும் மூன்று இந்திய வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.
அனைத்துலக டி20 போட்டிகளில் சென்ற ஆண்டு சூர்யகுமாருக்கு மிக அருமையான ஆண்டாக அமைந்தது. அவர் 18 போட்டிகளில் இரண்டு சதம் உட்பட 733 ஓட்டங்களை விளாசினார்.
இளம் தொடக்க ஆட்டக்காரரான ஜெய்ஸ்வால் 100 பந்துகளுக்கு 159 ஓட்டங்கள் என்ற பந்தடிப்பு விகிதத்துடன், 14 போட்டிகளில் 430 ஓட்டங்களைக் குவித்தார்.
இந்திய அணியின் வலக்கை சுழற்பந்து வீச்சாளரான ரவி பிஷ்னோய் சென்ற ஆண்டு அனைத்துலகப் போட்டிகளில் 44 ஓவர்களை மட்டும் வீசி 18 விக்கெட்டுகளை அள்ளினார். 2023 இறுதியில் டி20 பந்துவீச்சாளர்களுக்கான பட்டியலில் அவர் முதலிடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது.
அதேபோல், வேகப் பந்துவீச்சாளரான அர்ஷ்தீப் சிங் 21 போட்டிகளில் 26 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
ஐசிசி டி20 அணி 2023: சூர்யகுமார் யாதவ் (அணித்தலைவர்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரவி பிஷ்னோய், அர்ஷ்தீப் சிங் (நால்வரும் இந்தியர்கள்), ஃபில் சால்ட் (இங்கிலாந்து), நிக்கலஸ் பூரன் (வெஸ்ட் இண்டீஸ்), மார்க் சேப்மன் (நியூசிலாந்து), சிக்கந்தர் ரஸா, ரிச்சர்ட் இங்கராவா (இருவரும் ஸிம்பாப்வே), அல்பேஷ் ராம்ஜானி (உகாண்டா), மார்க் அடேர் (அயர்லாந்து).