கிங்ஸ்டன்: டி20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் ‘சூப்பர் 8’ சுற்றுக்குக் கடைசி அணியாக முன்னேறியது பங்ளாதேஷ்.
‘டி’ பிரிவிலிருந்து தென்னாப்பிரிக்க அணி ஏற்கெனவே அடுத்த சுற்றில் நுழைந்துவிட்டது. இதனையடுத்து, அச்சுற்றிலிருந்து இரண்டாவது அணியாக அடுத்த சுற்றுக்கு முன்னேறும் முனைப்புடன் திங்கட்கிழமை நடந்த ஆட்டத்தில் பங்ளாதேஷ், நேப்பாளத்தை எதிர்கொண்டது.
ஓட்டம் குவிக்க கடினமான கிங்ஸ்டன் ஆடுகளத்தில் பங்ளாதேஷ் அணி பந்தடிப்பில் தடுமாறியது. ஒரு கட்டத்தில் 30 ஓட்டங்களுக்கு நான்கு விக்கெட்டுகளை இழந்த அவ்வணி, ஒருவழியாக நூறு ஓட்டங்களைத் தாண்டியது. அவ்வணி 19.3 ஓவர்களில் 106 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது.
பின்னர் பந்தடித்த நேப்பாள அணியும் ஓட்டம் குவிக்கத் திணறியது. 25 ஓட்டங்களுக்கே அவ்வணி ஐந்து விக்கெட்டுகளைப் பறிகொடுத்தது. நான்கு பந்துகள் எஞ்சியிருந்த நிலையில் அவ்வணி 86 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்து, 20 ஓட்ட வித்தியாசத்தில் தோற்றுப் போனது.
பங்ளாதேஷ் அணியின் வேகப் பந்துவீச்சாளர்களான தன்சிம் ஹசன் சாகிப் நான்கு விக்கெட்டுகளையும் முஸ்தஃபிசுர் ரகுமான் மூன்று விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
‘டி’ பிரிவில் நடந்த இன்னோர் ஆட்டத்தில் இலங்கை அணி 83 ஓட்ட வித்தியாசத்தில் நெதர்லாந்தை வீழ்த்தியது.