அகமதாபாத்: நியூசிலாந்து அணிக்கெதிரான 2வது, 3வது டி20 போட்டிகளுக்கு இடையே இரண்டு நாள் இடைவெளி இருந்த நிலையில், இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் பலர் அகமதாபாத் திரையரங்கிற்குச் சென்று ஷாருக்கான் நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘பதான்’ திரைப்படத்தைக் கண்டுகளித்துவிட்டு வந்தனர்.
குல்தீப் யாதவ், ஷுப்மன் கில், இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ், ஷிவம் மாவி, ராகுல் திரிபாதி, யுஸ்வேந்திர சகல் ஆகியோரை நேற்று செவ்வாய்க்கிழமை (31-01-2023) அகமதாபாத்தின் ‘நியூஃபாங்கில்ட் மினிபிளெக்ஸ்’ திரையரங்கில் ஒன்றாகக் காண முடிந்தது.
அவர்களில் குல்தீப் யாதவ், ஷுப்மன் கில், சூர்யகுமார் யாதவ், ஷிவம் மாவி ஆகியோர் தங்களுக்கும் ஷாருக்கானுக்கும் இடையிலான நெருங்கிய தொடர்பைப் பகிர்ந்துகொண்டனர்.
இந்நால்வரும் ஷாருக்கானை உரிமையாளராகக் கொண்ட ஐபிஎல் அணியான கோல்கத்தா நைட் ரைடர்சுக்காக விளையாடி இருக்கின்றனர்.
இதனிடையே, முதலிரு டி20 போட்டிகளில் தரப்புக்கு ஒரு வெற்றி கிடைத்துள்ள நிலையில், இன்றிரவு (01-02-2023) அகமதாபாத் அரங்கில் நடக்கும் ஆட்டத்தில் கடைசி, 3வது போட்டியில் வென்று, தொடரை வெல்லும் முனைப்புடன் இந்தியாவும் நியூசிலாந்தும் களமிறங்குகின்றன.