ரோம்: உலகத் தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் இத்தாலிய டென்னிஸ் ஆட்டக்காரர் யானிக் சின்னருக்கு உலக ஊக்க மருந்துத் தடுப்பு மன்றம் மூன்று மாதத் தடை விதித்துள்ளது.
உடனடியாக நடப்பிற்கு வந்துள்ள அத்தடையை சின்னர் ஏற்றுக்கொண்டுள்ளார்.
அதனால், வரும் மே மாதம் நடக்கும் பிரெஞ்சுப் பொது விருதுப் போட்டியில் அவரால் கலந்துகொள்ள இயலும்.
உடலின் வளர்சிதை மாற்றத்தைத் தூண்டக்கூடிய கிளாஸ்ட்போல் எனும் ஊக்க மருந்தை சின்னர் உட்கொண்டது சோதனைகளில் தெரியவந்தது. அது, உடலைத் தளர்த்தும்போதும் விளையாட்டுச் சிகிச்சையின்போதும் தமது துணைக்குழு உறுப்பினர் ஒருவரால் தம் உடலுக்குள் சென்றதாக சின்னர் கூறியிருந்தார்.
ஊக்க மருந்துச் சோதனைகளில் அம்மருந்துப்பொருளை உட்கொண்டது உறுதியானபோதும், ‘அவர் தவறேதும் செய்யவில்லை’ என்று தீர்ப்பாயம் ஒன்று கடந்த 2024 ஆகஸ்ட்டில் தீர்ப்பு வழங்கியிருந்தது.
அதனை எதிர்த்து, விளையாட்டுச் சமரச நீதிமன்றத்தில் உலக ஊக்க மருந்துத் தடுப்பு மன்றம் மேல்முறையீடு செய்தது. அங்கு ஏற்பட்ட சுமுக முடிவை அடுத்து, சின்னருக்கான தடை நடப்பிற்கு வந்துள்ளது.
சின்னருக்கான தடைக்காலம் பிப்ரவரி 9 தொடங்கி ஏப்ரல் 13 வரை நீடிக்கும். பிரெஞ்சுப் பொது விருதுப் போட்டிகள் மே 25ஆம் தேதி தொடங்கவுள்ளன.