தென்கிழக்காசிய விளையாட்டுகளின் மல்யுத்தப் போட்டியில் முதல்முறையாக சிங்கப்பூர் தங்கம் வென்றிருக்கிறது. சிங்கப்பூருக்குப் பெருமை தேடித் தந்தவர் திமத்தி லோ.
ஆண்கள் 125 கிலோகிராம் எதேச்சைபாணி மல்யுத்தப் பிரிவில் இவர் 0வாகை சூடினார்.
2013, 2015ஆம் ஆண்டு விளையாட்டுகளின் ஜூடோ போட்டியில் வெண்கலம் வென்ற லோ, 2019 விளையாட்டுகளில் சாம்போ போட்டிக்கு மாறி அதிலும் வெண்கலம் வென்றார். அதற்குப் பிறகு சென்ற தென்கிழக்காசிய விளையாட்டுகளில் மல்யுத்தத்திற்கு மாறினார், மீண்டும் வெண்கலம்தான் கிட்டியது.
விட்டுக்கொடுக்காமல் போராடி ஒருவழியாக தங்கத்தை வென்றதோடு சிங்கப்பூருக்கு வரலாறு படைத்திருக்கிறார் 31 வயது லோ.
உணவு வர்த்தகரான இவருக்குக் காலை 5.30 மணிக்கெல்லாம் பணிகள் தொடங்கிவிடும். உணவுப் பொருள்களைத் தயார் செய்வதற்கும் சமைப்பதற்கும் ஒவ்வொரு நாளும் கிட்டத்தட்ட 10 மணிநேரம் செலவிடும் லோ ஓய்வெடுப்பதைப் பற்றி சிந்திக்காதவர். விளையாட்டுப் போட்டிகளிலும் இவர் அதே மனப்போக்கைப் பின்பற்றுகிறார்.
ஆண்கள் ஹாக்கியில் வெள்ளிப் பதக்கம் வென்றது சிங்கப்பூர். இறுதியாட்டத்தில் சிங்கப்பூரை 3-0 எனும் கோல் கணக்கில் வென்று தங்கத்தைத் தட்டிச் சென்றது மலேசியா.
“ஆட்டம் முழுவதும் (சிங்கப்பூர்) அணி சிறப்பாக விளையாடியது. என்னைப் பொறுத்தவரை போட்டி முழுவதும் அணி மிகச் சிறப்பாக ஆடியது. திட்டமிட்டபடி நாங்கள் இறுதியாட்டத்தை அணுகினோம். துரதிர்ஷ்டவசமாக வெற்றிகாணவோ சமநிலை காணவோ எங்களால் முடியவில்லை,” என்றார் சிங்கப்பூர் ஹாக்கி வீரர் ஜெரிமயா சேம்சன்.
தென்கிழக்காசிய விளையாட்டுகளின் ஆண்கள் நீர்ப்பந்தில் இழந்த பெயரை மீட்டுக்கொண்டது சிங்கப்பூர். இறுதியாட்டத்தில் 22-14 எனும் கோல் கணக்கில் கம்போடியாவை வென்று சிங்கப்பூர் தங்கத்தைக் கைப்பற்றியது. போட்டியில் தான் விளையாடிய ஐந்து ஆட்டங்களிலும் வென்றது அணி.
2019ஆம் ஆண்டு தென்கிழக்காசிய விளையாட்டுகளில் கோட்டைவிட்ட சிங்கப்பூர் ஆண்கள் நீர்ப்பந்து அணி மறுபடியும் வட்டார அளவில் அச்சுறுத்தும் அணியாக உருவெடுத்துள்ளது.
ஆண்கள் காற்பந்தில் மியன்மாரை 3-1 எனும் கோல் கணக்கில் வென்று வெண்கலப் பதக்கத்தை வென்றது வியட்னாம்.