பெங்களூரு: விக்கெட்காப்பாளர் பந்தைப் பிடிக்காமல் நழுவவிட்டபோதும் பந்தடிப்பாளர் ஆட்டமிழந்ததாக நடுவர் கையை உயர்த்தி அறிவித்ததால் சர்ச்சை வெடித்துள்ளது.
இச்சம்பவம் இந்தியாவின் முக்கிய உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் ஒன்றான, 23 வயதிற்கு உட்பட்டோருக்கான சி.கே. நாயுடு கிண்ண இறுதிப் போட்டியில் நிகழ்ந்தது.
இம்மாதம் 10ஆம் தேதி தொடங்கிய அந்த நான்கு நாள் போட்டியில் கர்நாடக - உத்தரப் பிரதேச அணிகள் மோதின.
முதலில் கர்நாடக அணி பந்தடித்தது. அதன் தொடக்க ஆட்டக்காரர் பிரகார் சதுர்வேதி, உ.பி. வீரர் குணால் தியாகி வீசிய பந்தை அடித்து ஆட முற்பட்டார். பந்து மட்டையில் பட்டு, பின்னால் செல்ல விக்கெட் காப்பாளர் ஆராத்ய யாதவ் அதனைப் பிடிக்க முயன்றார். ஆனால், பந்து அவரது கைகளுக்குள் சிக்காமல், கீழே விழுந்தது.
பந்து கீழே விழுந்ததைக் கவனிக்காத கள நடுவரும் சதுர்வேதி ஆட்டமிழந்ததாக அறிவித்தார். சதுர்வேதியும் திடலைவிட்டு வெளியேறினார்.
இதனைக் கண்ட ரசிகர் ஒருவர், அந்தக் காணொளியைச் சமூக ஊடகத்தில் பகிர்ந்து, இந்திய உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் நடுவர்களின் தரம், செயல்பாடு குறித்து கேள்வி எழுப்பியுள்ளார்.
இச்சம்பவம் குறித்து இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) விசாரிக்க வேண்டும் என்று அந்த ரசிகர் வலியுறுத்தி இருக்கிறார்.
இணையவாசிகள் சிலர், விக்கெட் காப்பாளர் ஆராத்ய யாதவிற்குத் தடை விதிக்க வேண்டும் என்று குரல் எழுப்பியுள்ளனர்.
எப்படியாயினும், இறுதியில் கர்நாடக அணியே கிண்ணம் வென்றது குறிப்பிடத்தக்கது.