மான்செஸ்டர்: மான்செஸ்டர் சிட்டிக்கு எதிரான இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்தாட்டத்தில் தோல்வியின் விளிம்பிலிருந்து மீண்டு வந்தது மட்டுமின்றி வெற்றியையும் பறித்துக்கொண்டது மான்செஸ்டர் யுனைடெட்.
ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 15) நடைபெற்ற ஆட்டத்தில் யுனைடெட் 2-1 எனும் கோல் கணக்கில் வென்றது.
ஆட்டத்தின் 88வது நிமிடம் வரை சிட்டி முன்னிலையில் இருந்தது. ஜோஸ்கோ குவார்டியோல் முற்பாதியாட்டத்தில் அக்குழுவை முன்னுக்கு அனுப்பினார்.
ஆட்டம் முடியும் சற்று நேரத்துக்கு முன்னர் 88வது நிமிடத்தில் யுனைடெட்டுக்குக் கிடைத்த பெனால்டி வாய்ப்பை அணித் தலைவர் புருனோ ஃபெர்னாண்டஸ் கோலாக்கினார். அதற்கு இரு நிமிடங்களுக்குள் அமாட் டியாலோ யுனைடெட்டின் வெற்றி கோலைப் போட்டு சிட்டியை அதிர்ச்சிக்கு உள்ளாக்கினார்.
கடந்த 11 ஆட்டங்களில் எட்டில் தோல்வியடைந்து ஒன்றில் மட்டுமே வென்றுள்ள சிட்டிக்கு இத்தோல்வி மேலும் தலைவலியைத் தந்துள்ளது. அதேவேளை, புதிய நிர்வாகி ரூபன் அமோரிம்முக்குக்கீழ் யுனைடெட் இனி படிப்படியாக மேம்படும் என்ற நம்பிக்கை அக்குழுவின் ரசிகர்களிடையே பிறந்துள்ளது.
ஞாயிற்றுக்கிழமை நடந்த இதர பிரிமியர் லீக் ஆட்டங்களில் கிறிஸ்டல் பேலஸ், பிரைட்டனை 3-1 எனும் கோல் கணக்கில் வென்றது, பிரென்ட்ஃபர்டை 2-1 எனும் கோல் கணக்கில் வென்றது சிறப்பாக விளையாடிவரும் செல்சி. மற்றோர் ஆட்டத்தில் டோட்டன்ஹம் ஹாட்ஸ்பர், சவுத்ஹேம்ப்டனை 5-0 எனும் கோல் கணக்கில் வீழ்த்தியது. அந்த ஆட்டம் முடிந்து சற்று நேரத்தில் சவுத்ஹேம்ப்டன் நிர்வாகி ரசல் மார்ட்டின் பணிநீக்கம் செய்யப்பட்டார்.