இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு வெளிநாட்டுப் பயிற்றுவிப்பாளரைத் தேடும் பணியில் தடைகள் நீடிக்கின்றன.
ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் நட்சத்திரம் ஷேன் வாட்சன், வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் தலைவர் டேரன் சமி இருவரும் தலைமைப் பயிற்றுவிப்பாளர் பதவியை ஏற்க மறுத்துவிட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
பாகிஸ்தான் சூப்பர் லீக் (பிஎஸ்எல்) டி20 போட்டிகளின்போது கராச்சி நகரில் வாட்சனுடன் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய அதிகாரிகள் பேச்சு நடத்தியதாகச் சொல்லப்படுகிறது.
“தொடக்கத்தில் பாகிஸ்தான் அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளராகச் செயல்பட வாட்சன் ஆர்வம் காட்டினார். அவர் போட்ட நிபந்தனைகளை ஏற்கவும் வாரியம் தயாராக இருந்தது,” என்று பாகிஸ்தான் தரப்பைச் சுட்டி, என்டிடிவி செய்தி வெளியிட்டுள்ளது.
வாட்சன் கேட்ட சம்பளத்தைத் தர வாரியம் கிட்டத்தட்ட ஒப்புக்கொண்டுவிட்ட நிலையில், அதுகுறித்த விவரங்கள் பாகிஸ்தான் ஊடகங்களிலும் சமூக ஊடகங்களிலும் வெளியானதால் அவர் அதிருப்தி அடைந்ததாகக் கூறப்படுகிறது.
இந்திய பிரிமியர் லீக் (ஐபிஎல்) போட்டிகளிலும் அமெரிக்காவில் மேஜர் லீக் போட்டிகளிலும் வருணனையாளராகச் செயல்பட தாம் ஒப்புக்கொண்டுள்ளதாகக் கூறி, பாகிஸ்தான் வாரியம் வழங்கிய வாய்ப்பை வாட்சன் ஏற்க மறுத்துவிட்டதாகச் சொல்லப்படுகிறது.
வாட்சனுக்கு ஓராண்டிற்கு 2 மில்லியன் அமெரிக்க டாலர் தர பாகிஸ்தான் வாரியம் முன்வந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இதனையடுத்து, இடைக்காலப் பயிற்றுவிப்பாளர் நியமிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுவதாகவும் பாகிஸ்தான் அணியின் முன்னாள் தலைவர்கள் யூனிஸ் கான், முகம்மது யூசுஃப், இன்சமாம் உல் ஹக், மொயின் கான் ஆகியோரது பெயர்கள் பரிசீலனையில் உள்ளதாகவும் அறியப்படுகிறது.