சிட்னி: ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரரான டேவிட் வார்னர், புதன்கிழமை (ஜனவரி 3) பாகிஸ்தானுக்கு எதிராகத் தொடங்கும் டெஸ்ட் போட்டியுடன் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளிலிருந்து விடைபெறவுள்ளார்.
இந்நிலையில், டெஸ்ட் போட்டிகளில் ஆஸ்திரேலிய வீரர்கள் அணியும் ‘பேகி கிரீன்’ தொப்பி இருந்த அவரது பையை யாரோ திருடிச் சென்றுவிட்டனர்.
அந்தப் பச்சை நிறத் தொப்பியை ஆஸ்திரேலிய வீரர்கள் மிகவும் கௌரவமாகக் கருதுவதால் வார்னர் மிகவும் வருத்தத்தில் ஆழ்ந்துள்ளார்.
திருடுபோன அவரது பையில் இரண்டு பச்சை நிறத் தொப்பிகள் இருந்ததாகக் கூறப்படுகிறது. ஒன்று, வார்னர் டெஸ்ட் போட்டிகளில் அறிமுகமானபோது அவருக்கு வழங்கப்பட்டது. இன்னொன்று, 2017ஆம் ஆண்டு அவருக்கு வழங்கப்பட்ட மாற்றுத் தொப்பி.
இந்நிலையில், அந்தப் பையைத் திருப்பித் தந்துவிடும்படிம் சமூக ஊடகம்வழி வார்னர் உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளார்.
“என் பயணப்பையிலிருந்து என் முதுகுப்பையை யாரோ ஒருவர் எடுத்துச் சென்றுவிட்டார். என் குழந்தைகளுக்கு வாங்கிய பரிசுப்பொருள்களும் ‘பேகி கிரீன்’ தொப்பிகளும் அதில்தான் உள்ளன. உடனடியாக அதனைத் திருப்பித் தந்துவிட்டால் மிக்க நன்றியுடையவனாக இருப்பேன்,” என்று வார்னர் ஒரு காணொளி வழியாகக் கேட்டுக்கொண்டுள்ளார்.
அத்துடன், “உங்களுக்கு அது போன்ற பைதான் வேண்டுமெனில் என்னிடம் ஒரு பை உள்ளது, அதை நீங்கள் பெற்றுக்கொள்ளலாம்,” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.