உலகக் கிண்ணத்தை 36 ஆண்டுகளில் முதன்முறையாக வெல்வதற்கு அர்ஜென்டினா அவதியுறவும் பாடுபடவும் வேண்டியிருந்தது.
பிரான்ஸ் அணிக்கு எதிரான இறுதியாட்டம் குறித்து கருத்துரைத்த அர்ஜென்டினா கோல்காப்பாளர் எமிலியானோ மார்ட்டினேஸ், “நாங்கள் அவதியுற்ற ஆட்டமாக இது அமைந்தது,” என்றார்.
பரபரப்புக்கு குறைவே இல்லாத இறுதியாட்டத்தில் இரண்டு முறை முன்னிலையை நழுவவிட்டது அர்ஜென்டினா.
ஆட்டம் முடிவடைந்த பிறகு தம்மால் கண்ணீரைக் கட்டுப்படுத்த முடியவில்லை என்று அர்ஜென்டினா பயிற்றுவிப்பாளர் லயனல் ஸ்கலோனி சொன்னார்.
“இந்த ஆட்டத்தில் நாங்கள் இவ்வளவு அவதியுற்றுள்ளோம் என்பதை என்னால் நம்பவே முடியவில்லை. ஆனால், இந்த அணி அனைத்திற்கும் பதிலடி கொடுத்தது,” என்றார் அவர்.
கத்தாரில் நடைபெற்ற உலகக் கிண்ணப் போட்டியில் ஆக இளம் பயிற்றுவிப்பாளராக ஸ்கலோனி, 44, உள்ளார்.
அர்ஜென்டினாவுக்கு இது மூன்றாவது உலகக் கிண்ணம் ஆகும். கடைசியாக, 1986ல் டியேகோ மாரடோனா கிட்டத்தட்ட தனியாளாக நின்று அர்ஜென்டினாவுக்கு கிண்ணத்தை வென்று தந்தார்.