இந்திய கிரிக்கெட் அணி வியாழக்கிழமை (மார்ச் 9) ஆஸ்திரேலியாவுடன் நான்காவது டெஸ்ட் ஆட்டத்தில் விளையாடவுள்ளது.
ஆட்டம் அகமதாபாத்தில் நடக்கிறது.
நான்கு டெஸ்ட் போட்டி கொண்ட பார்டர்-கவாஸ்கர் தொடரில் இந்திய அணி 2-1 என்று முன்னிலை பெற்று கிண்ணத்தைத் தக்கவைத்துக்கொண்டது.
இருப்பினும் மூன்றாவது ஆட்டத்தில் ஏற்பட்ட தோல்வியால் இந்திய அணி டெஸ்ட் சாம்பியன்ஷிப் கிண்ணத்திற்கான இறுதி ஆட்டத்திற்குத் தகுதிபெற சில சிக்கல்கள் உள்ளன.
நான்காவது ஆட்டத்தை வென்றால் இந்திய அணி எளிதாக இறுதி ஆட்டத்திற்கு தகுதிபெறும்.
ஆனால் இந்திய அணி ஆட்டத்தை சமன் செய்தாலோ தோற்றாலோ அது இலங்கை-நியூசிலாந்து தொடரை நம்பி இருக்க வேண்டும்.
இலங்கை அணி நியூசிலாந்தை 2-0 என்று தொடரை வென்றால் இந்திய அணி இறுதி ஆட்டத்திற்கு தகுதிபெறாமல் போகக்கூடும்.
டெஸ்ட் சாம்பியன்ஷிப் கிண்ணத்திற்கான இறுதி ஆட்டத்திற்கு ஆஸ்திரேலிய அணி ஏற்கெனவே தகுதிபெற்றுவிட்டது.
இறுதி ஆட்டம் லண்டன் ஓவல் விளையாட்டரங்கில் ஜூன் மாதம் 7ஆம் தேதி நடக்கவிருக்கிறது.