மவுன்ட் மாங்கனூயி: நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் தலைவர் கேன் வில்லியம்சன், தென்னாப்பிரிக்க அணிக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்சிலும் சதம் விளாசினார்.
முதல் இன்னிங்சில் வில்லியம்சன் 118 ஓட்டங்களையும் இளம் வீரர் ரச்சின் ரவீந்திரா 240 ஓட்டங்களையும் விளாச, நியூசிலாந்து அணி 511 ஓட்டங்களைக் குவித்தது.
அதனைத் தொடர்ந்து பந்தடித்த தென்னாப்பிரிக்க அணி தனது முதல் இன்னிங்சில் 162 ஓட்டங்களுக்குச் சுருண்டது. ஆயினும், அதற்கு ‘ஃபாலோ ஆன்’ கொடுக்காமல் நியூசிலாந்து மீண்டும் பந்தடித்தது.
மூன்றாம் நாளான செவ்வாய்க்கிழமை (பிப்ரவரி 6) நியூசிலாந்து அணி தனது இரண்டாவது இன்னிங்சில் நான்கு விக்கெட் இழப்பிற்கு 179 ஓட்டங்களை எடுத்திருந்தது. வில்லியம்சன் 109 ஓட்டங்களை எடுத்து ஆட்டமிழந்தார்.
இதனையடுத்து, நியூசிலாந்து அணி 528 ஓட்டங்கள் என்ற முன்னிலையில் உள்ளதால் தென்னாப்பிரிக்க அணியின் தோல்வி பெரும்பாலும் உறுதியாகியுள்ளது.
அனைத்துலக அனுபவம் இல்லாத நீல் பிராண்ட் தலைமையில் புதிய வீரர்கள் பலர் அடங்கிய தென்னாப்பிரிக்க அணி நியூசிலாந்திற்கு அனுப்பப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.