உலகக் கிண்ணம்: அர்ஜென்டினா-நெதர்லாந்து ஆட்டத்தின்போது செய்தியாளர் மரணம்

உலகக் கிண்ணம்: அர்ஜென்டினா-நெதர்லாந்து ஆட்டத்தின்போது செய்தியாளர் மரணம்

2 mins read
853a6d4f-2c08-433f-8080-3f4919dcaeaf
2017ல் எடுக்கப்பட்ட படத்தில் கிராண்ட் வால் (வலது). படம்: ஏஎஃப்பி -

காற்பந்து விளையாட்டு பற்றி பரவலாக செய்தி எழுதி வந்த அமெரிக்க செய்தியாளர் கிராண்ட் வால், நேற்று வெள்ளிக்கிழமை கத்தாரில் மரணமடைந்தார். அவருக்கு வயது 48.

உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டியின் காலிறுதிச் சுற்றில் அர்ஜென்டினாவும் நெதர்லாந்தும் பொருதிய ஆட்டம் குறித்து செய்தி திரட்ட அரங்கில் அவர் இருந்தார்.

இந்நிலையில், தொலைப்பேசி வழி பேட்டியளித்த வாலின் முகவர் டிம் ஸ்காலன், வாலின் மரணம் அடைந்துவிட்டதை உறுதிப்படுத்தினார்.

கடந்த ஆண்டிலிருந்து 'சிபிஎஸ் ஸ்போர்ட்ஸ்' செய்தி நிறுவனத்திற்காக பணியாற்றி வந்த வால், ஆட்டத்தின் இறுதிக் கட்டத்தில் சுயநினைவை இழந்தார்.

அவருக்கு இதய இயக்க மீட்புச் சிகிச்சை (சிபிஆர்) அளித்த மருத்துவ உதவியாளர்கள், பின்னர் தூக்குப் படுக்கையில் அவரைத் தூக்கிச் சென்றனர்.

வாலுக்கு அனேகமாக மாரடைப்பு ஏற்பட்டிருக்கக்கூடும் என்று 'வால் ஸ்திரீட் ஜர்னல்' செய்தித் தளம் தெரிவித்தது.

கத்தாரில் உள்ள மருத்துவமனையிலோ மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டபோதோ வால் இறந்திருக்கக்கூடும் என நம்பப்படுகிறது. உலகக் கிண்ணப் போட்டி நடைபெற்றபோது அவருக்கு உடல்நலம் சரியில்லை எனக் கூறப்பட்டது.

"அவருக்கு ஒழுங்கான தூக்கம் இல்லை. அவர் 'மெலட்டொனின்' அல்லது வேறு ஏதாவது மருந்து எடுத்தாரா என்று கேட்டேன். தாம் சிறிது நேரம் ஓய்வெடுக்க வேண்டும் எனக் கூறினார்," என்று ஸ்காலன் விளக்கினார்.

தமது எட்டாவது உலகக் கிண்ணப் போட்டி குறித்து வால் செய்தி வழங்கிக்கொண்டிருந்தார்.

மருத்துவ நிபுணரான வாலின் மனைவி டாக்டர் செலின் கவுண்டர், "நான் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளேன்," என்று டுவிட்டரில் பதிவிட்டார்.