உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டியின் காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ள முதல் வடஆப்பிரிக்க மற்றும் அரபு நாடு என்று வரலாறு படைத்துள்ளது மொரோக்கோ அணி.
அணியின் முன்னேற்றத்தை உன்னிப்பாகக் கவனித்து வருவோரில் சிங்கப்பூரில் வசிக்கும் அப்தெலெலா கருமும் ஒருவர்.
பிரான்சில் மொரோக்கோ நாட்டு பெற்றோருக்குப் பிறந்த இவர், “வரலாறு படைக்கப்பட்டிருப்பதைக் காண்பது மிகவும் அற்புதமாக உள்ளது.
“பொதுவாக ஆப்பிரிக்க காற்பந்துப் போட்டிகளில் மொரோக்கோ அணி விளையாடுவதைப் பார்த்திருக்கிறோம். உலகக் கிண்ணப் போட்டிக்கு அணி தகுதிபெற்றிருப்பதே பெரிய விஷயம். ஆனால், எதிர்பார்ப்புகளை முறியடித்து அணி இவ்வளவு தூரம் கடந்து வந்திருப்பது எங்களுக்கு உத்வேகம் தருகிறது,” என்றார்.
நாளை சனிக்கிழமை இரவு நடைபெறும் காலிறுதிச் சுற்று ஆட்டத்தில் 2016 ஐரோப்பிய வெற்றியாளரான போர்ச்சுகலுடன் மொரோக்கோ பொருதுகிறது. சிங்கப்பூரிலிருந்து தங்கள் அணிக்கு ஆதரவளிக்கும் மொரோக்கோவாசிகளில் கருமும் ஒருவர்.
பெல்ஜியம், ஸ்பெயின் போன்ற பெரிய அணிகளை வீழ்த்தி காலிறுதிச் சுற்றில் மொரோக்கோ நாட்டு கொடியைப் பார்ப்பது தமக்கு மிகுந்த பெருமை தருவதாக வர்த்தக மேலாளர் மெஹ்டி அலிஜேட், 32, கூறினார்.
“இங்கிலிஷ் பிரிமியர் லீக் அல்லது ஸ்பானிய லீக்கில் விளையாடும் சில பிரபலமான மொரோக்கோ நாட்டு ஆட்டக்காரர்கள் இருக்கின்றனர். ஆனால், இந்தத் தலைமுறை வீரர்கள் நாட்டுக் கொடியை உயர பறக்கவிடுவது இதுவே முதன்முறை,” என்றார் அவர்.
இப்ராஹிம் போஹிலாலும் அவருடைய மனைவியும் வீட்டில் இருந்தவாறு மொரோக்கோ ஆட்டங்களைப் பார்த்து வருகின்றனர்.
மின் வணிகத் தளம் ஒன்றின் உதவித் தலைவரான இப்ராஹிம், 40, “ஆசிய, ஆப்பிரிக்க அணிகளிடையே ஓர் ஒற்றுமை உண்டு. தன்னடக்கத்துடனும் குழு உணர்வுடனும் அவை விளையாடும்.
“இப்போட்டியில் மொரோக்கோ இவ்வளவு தூரம் கடந்து வந்திருப்பது, நாட்டு மக்கள் அனைவருக்கும் பெரும் தன்னம்பிக்கையை அளித்துள்ளது. வெற்றியடைய சக்திவாய்ந்ததாகவோ பணக்காரராகவோ இருக்க வேண்டும் என்பதில்லை அணி நிரூபித்துள்ளது. தன்னடக்கம் மற்றும் குழு உணர்வு இருந்தால் நம்மால் பெரிதாக சாதிக்க முடியும்,” என்று சொன்னார்.