சென்னை: ஈரோடு கிழக்குத் தொகுதி வேட்பாளர் யார் என்பது குறித்து இன்னும் ஓரிரு நாள்களில் அறிவிக்கப்படும் என்று அதிமுக கூட்டணி சார்பில் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் உள்ள த.மா.கா. கட்சி அலுவலகத்தில் அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசனை அதிமுக முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், வளர்மதி, கோகுல இந்திரா, பெஞ்சமின் ஆகியோர் சந்தித்து நேற்று ஆலோசனை நடத்தினர்.
அதன்பின்னர், ஜி.கே.வாசனும் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்டோரும் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினர்.
ஜி.கே.வாசன் கூறுகையில், "தற்போதைய சூழ்நிலையில் இடைத்தேர்தல் என்பது முக்கியத்துவம் வாய்ந்தது. அதிமுக-த.மா.கா. கட்சி இடையே சுமூக உறவு இருந்து வருகிறது. எங்களது இலக்கு தேர்தலில் கூட்டணிக் கட்சி வெற்றி பெற வேண்டும் என்பதே. ஈரோடு கிழக்குத் தொகுதி வேட்பாளர் யார் என்பது குறித்து ஓரிரு நாள்களில் அறிவிக்கப்படும். தேர்தலில் நிச்சயம் வெற்றி பெறுவோம். வாக்குறுதிகளை நிறைவேற்றாத அரசாக திமுக அரசு உள்ளது," என்று கூறினார்.
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறுகையில், கூட்டணிக் கட்சிகள் இணைந்து வேட்பாளரை முடிவு செய்த பின்னர் சின்னம் குறித்து முடிவெடுக்கப்படும் என்றார்.

