வைரமுத்து: நகைச்சுவை மூலம் மனிதர்களின் மாரடைப்பைத் தடுக்கும் விவேக் நலமடைய வேண்டும்

வைரமுத்து: நகைச்சுவை மூலம் மனிதர்களின் மாரடைப்பைத் தடுக்கும் விவேக் நலமடைய வேண்டும்

1 mins read
Google News Preferred Icon

நகைச்சுவை மூலம் மனிதர்களின் மாரடைப்பைத் தடுக்கின்ற விவேக் கலைப்பணியை வாழ்நாளெல்லாம் தொடர வேண்டும்" என்று கவிஞர் வைரமுத்து தெரிவித்திருக்கிறார்.

சாலிகிராமத்தில் உள்ள வீட்டில் இருந்த நடிகர் விவேக்குக்கு நெஞ்சுவலி மற்றும் மூச்சுத்திணறல் ஏற்பட்டதைத் தொடர்ந்து அவரது மனைவி மற்றும் மகள் அவரை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதித்துள்ளனர். தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள விவேக்கின் உடல்நிலையை மருத்துவர்கள் உன்னிப்பாக கவனித்து வருகின்றனர்.

விவேக்குக்கு விரைந்து குணமடைய திரை பிரபலங்கள் பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், கவிஞர் வைரமுத்து தமது டுவிட்டர் பக்கத்தில் "சின்னக் கலைவாணர் தம்பி விவேக் விரைந்து நலமுற்று மீள வேண்டும். மனிதர்களின் மாரடைப்பைத் தடுக்கின்ற நகைச்சுவைக் கலைப்பணியை வாழ்நாளெல்லாம் தொடர வேண்டும். வாழ்த்துகிறேன்," என்று பதிவிட்டுள்ளார்.

அதேசமயம், விவேக்கின் உடல்நிலையை கொரோனா தடுப்பூசியுடன் தொடர்புபடுத்தி வதந்திகளும் பரவி வருகின்றன.

இந்நிலையில், நடிகை குஷ்பு தமது டுவிட்டர் பக்கத்தில் "விவேக் நேற்று தடுப்பூசி போட்டதையும் இன்று அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதையும் தொடர்புபடுத்த வேண்டாம். இரண்டுக்கும் எந்த தொடர்பும் இல்லை. மருத்துவர்கள் தங்கள் கடமையைச் செய்யட்டும். தயவு செய்து தடுப்பூசி போட்டுக்கொள்ளுங்கள். வதந்திகளை நம்ப வேண்டாம்" என்று கேட்டுக்கொண்டுள்ளார்.