சென்னை: தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறை சார்பில் 5.1.2025ஆம் தேதி பன்னாட்டுக் கருத்தரங்கு தொடங்கப்பட்டுள்ளது. இந்தக் கருத்தரங்கை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்து ‘சிந்துவெளி வரிவடிவங்களும் தமிழ்நாட்டுக் குறியீடுகளும்: ஒரு வடிவவியல் ஆய்வு’ என்னும் நூலை வெளியிட்டு உரையாற்றினார்.
மூன்று நாள்கள் நடைபெறவிருக்கும் இந்தக் கருத்தரங்கில் வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களைச் சேர்ந்த 24 ஆய்வாளர்கள், தொல்லியலாளர்கள் கலந்துகொள்கின்றனர். அவர்கள் சிந்துவெளி நாகரிகம் மற்றும் இந்தியத் துணைக் கண்டத்தில் மற்ற நாகரிகங்கள், பண்பாடுகள் குறித்து பல்வேறு தலைப்புகளில் தங்களுடைய ஆய்வுரைகளை வழங்குகின்றனர்.
சிந்துவெளிப் பண்பாட்டுக் கண்டுபிடிப்பை உலகுக்கு அறிவித்த இந்திய தொல்லியல் துறையின் முன்னாள் தலைமை இயக்குநா் சா் ஜான் ஹீபா்ட் மாா்ஷல் சிலைக்கு முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
தொடக்கவிழாவில் உரையாற்றிய முதல்வர் மு.க.ஸ்டாலின், சிந்துவெளி நாகரிகம் ஆரியத்திற்கு முற்பட்ட நாகரிகம் என்பதை உலகுக்கு உணர்த்திய ஜான் மார்ஷலுக்கு சிலை அமைக்கும் பெரும் பேறு திராவிட மாடல் அரசுக்குக் கிடைத்துள்ளது.
1948ஆம் ஆண்டிலேயே சிந்துவெளி அடையாளங்களை வெளிக்கொண்டு வந்தவர் அண்ணா. செம்மொழி மாநாட்டில் சிந்துவெளி நாகரிகத்தை அடையாளப்படுத்தியவர் கருணாநிதி என தெரிவித்தார்.
மேலும் உரையாற்றிய முதல்வர் மு.க.ஸ்டாலின், சிந்துவெளி எழுத்து புதிரை விடுவிப்பவர்களுக்கு 1 மில்லியன் அமெரிக்க டாலர் பரிசு வழங்கப்படும்.
கல்வெட்டு ஆய்வாளர்களை ஊக்குவிக்கும் வகையில் ஆண்டுதோறும் இரண்டு அறிஞர்களுக்கு விருது வழங்கப்படும். தொல்லியல் அறிஞர் ஐராவதம் மகாதேவன் பெயரில் ஆய்வு இருக்கை அமைக்க ரூ.2 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என அறிவித்தார்.