சென்னை: மலையாளம், கன்னடம், தெலுங்கு, ஆங்கில நூல்களில் இருந்து தமிழில் சிறந்த முறையில் மொழிபெயர்க்கப்பட்ட நூல்களுக்கான சாகித்திய அகாதமி விருது பெற்ற 10 மொழி பெயர்ப்பாளர்களுக்கு ரூ.40,00,000 மதிப்பீட்டில் வீடு ஒதுக்கீட்டிற்கான ஆணைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
இந்த வீடுகள் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் அடுக்குமாடி குடியிருப்புகளில் இடம்பெற்றிருக்கின்றன.
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 1994 முதல் 2023 வரை மொழிபெயர்ப்பாளருக்கான சாகித்திய அகாதமி விருது பெற்ற 10 மொழி பெயர்ப்பாளர்களுக்கு தஞ்சாவூர், கோயம்புத்தூர், சோழிங்கநல்லூர், சென்னை, பெசன்ட்நகர், ஜெ.ஜெ. நகர் உள்ளிட்ட பகுதிகளில் குடியிருப்பு வழங்கப்படுகிறது.
கன்னடத்திலிருந்து தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட ‘பருவம்’ எனும் நூலிற்காக ப. பாஸ்கரன் (எ) பாவண்ணன், ஒடியாவிலிருந்து தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட “பறவைகள் ஒருவேளை தூங்கிப் போயிருக்கலாம்” எனும் நூலிற்காக பி.க.இராஜேந்திரன் (எ) இந்திரன், தெலுங்கிலிருந்து தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட ‘மீட்சி’ நூலிற்காக கௌரி கிருபானந்தன் ஆகியோருக்கு குடியிருப்பு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதேபோல் மலையாளத்திலிருந்து தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட ‘கசாக்கின் இதிகாசம்’, ‘செங்கோல் இல்லாமல் கிரீடம் இல்லாமல்’, ‘திருடன் மணியன்பிள்ளை’, ‘விஷக்கன்னி’, ‘நிலம் பூத்து மலர்ந்த நாள்’ ஆகிய நூல்களுக்காக தி. மாரிமுத்து (எ) யூமா வாசுகி, சா. மணி (எ) நிர்மாலயா, சா. முகம்மது யூசுப், ஆ. செல்வராசு (எ) குறிஞ்சிவேலன், கே.வி. ஜெயஸ்ரீ ஆகியோருக்கு வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
ஆங்கிலத்திலிருந்து தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட ‘பொறுப்புமிக்க மனிதர்கள்’, ‘கருங்குன்றம்’ நூலிற்காக க. பூரணச்சந்திரன், கண்ணையன் தட்சணமூர்த்தி ஆகியோருக்கும் வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
மேற்காணும் 10 மொழிபெயர்ப்பாளர்களுக்கும் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் குடியிருப்புக்கான ஒதுக்கீட்டு ஆணைகளை மு.க.ஸ்டாலின் வழங்கினார்.