காஞ்சிபுரம்: பரந்தூர் விமான நிலைய திட்டத்திற்கு இதுவரை 1,000 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளதாக வருவாய்த் துறை தெரிவித்துள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம், பரந்தூரில் 5,320 ஏக்கர் பரப்பளவில் பசுமைவெளி விமான நிலையம் அமையவுள்ளது. விமான நிலையத்தை அமைப்பதற்கான திட்டத்தின் மதிப்பு ரூ.29,150 கோடி எனக் கணக்கிடப்பட்டுள்ளது. அரசு நிலங்கள் போக, மீதமுள்ள 3,774 ஏக்கர் தனியார் நிலங்களைக் கையகப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இதன்படி, செப்டம்பர் வரை 12 கிராமங்களைச் சேர்ந்தவர்கள் தங்களது 566 ஏக்கர் நிலங்களை வழங்கிவிட்டதாக வருவாய்த் துறை தெரிவித்தது.
இந்நிலையில், அக்டோபர் முடிவில் கையகப்படுத்தப்பட்ட 1,000 ஏக்கர் நிலத்துக்கான இழப்பீட்டுத் தொகையாக ரூ.400 கோடி வழங்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.
நிலம் கையகப்படுத்தப்படுவதற்கு ஒருதரப்பு எதிர்ப்பும் மற்றொரு தரப்பு ஆதரவும் வழங்கி வருகின்றன.

