மதுரை: மதுரை திருமலை நாயக்கர் மகால் தூண்கள் மற்றும் சுவர்களில் கிறுக்கினால் ரூ.ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என மகால் நிர்வாகம் அறிவித்துள்ளது.
திருமலை நாயக்கர் மகாலில் புதுப்பிப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதன் பள்ளியறையில் உள்ள 12 சதுர தூண்களின் கீழ்ப்பகுதியில் விளக்கொளி அமைப்பதற்கான வேலைகள் நடக்கின்றன.
அதன் பின் தரைத்தளம் அமைக்கப்படும். மகாலின் பக்கவாட்டில் கல்நார் (asbestos) தகடு அமைத்து பழங்காலக் கற்சிலைகள் பாதுகாக்கப்படுகின்றன.
அந்தப் பணிகள் முடிந்தபின் நூலகத்தைப் புதுப்பிக்கும் பணி தொடங்கிவிடும். மூன்று மாதங்களில் மகால் முழுமையாக பார்வையாளர்களுக்குத் தயாராகிவிடும்.
ரூ.10 கோடிக்கும் மேல் செலவு செய்து புதுப்பிக்கும் பணிகள் நடப்பதால் துாணிலோ சுவரிலோ கிறுக்குவோருக்கு ரூ.1,000 அபராதம் விதிக்கப்படும். இதற்காகவே கண்காணிப்பு கேமராக்கள் கூடுதலாக பொருத்தப்பட்டுள்ளதாக மகால் நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

