ராமேஸ்வரம்: தமிழகத்தின் ராமேஸ்வரம் பகுதியில் அமைக்கப்பட்டு வரும் 108 அடி உயர அனுமார் சிலையின் கட்டுமானப் பணி தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.
இந்தியாவின் நான்கு திசைகளிலும் 108 அடி உயரத்தில் அனுமார் சிலைகளை அமைக்கும் திட்டம் வேகமாகச் செயல்படுத்தப்பட்டு வருகிறது. நான்கு திசைகளையும் கவனத்தில் கொண்டு ராமேஸ்வரத்தில் 108 அடி உயரச் சிலை அமைக்கப்படுகிறது.
நான்கு திசைகளிலும் பிரம்மாண்ட அனுமார் சிலைகளை நிறுவும் நோக்கில், கடந்த 2008ஆம் ஆண்டு தனியார் அறக்கட்டடளை சார்பாக சிலை அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டன.
இமாச்சலப் பிரதேசத்தின் சிம்லா பகுதியில் அமைந்துள்ள ஜக்கு மலையில் முதல் சிலை 2010ல் திறந்து வைக்கப்பட்டது.
குஜராத்தின் மோர்பி பகுதியில் இரண்டாவது சிலை அமைக்கப்பட்டு, 2022ல் பிரதமர் நரேந்திர மோடியால் காணொளிமூலம் திறந்து வைக்கப்பட்டது.
இதையடுத்து, ராமாயண வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தென்னிந்தியாவின் எல்லையான ராமேஸ்வரத்தில் மூன்றாவது சிலை அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இதன் தொடர்ச்சியாக நான்காவது சிலை மேற்கு வங்க மாநிலத்தில் அமைக்கப்பட உள்ளது.
இலங்கையைப் பார்க்கும் பிரம்மாண்ட வடிவம்
ராமேஸ்வரம் ஓலைக்குடா கடற்கரை அருகே சுமார் 83 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இந்தப் பிரம்மாண்டத் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டன. கடல் காற்றையும் இயற்கைச் சீற்றங்களையும் தாங்கும் வகையில் நவீனப் பொறியியல் தொழில்நுட்பத்துடன் இச்சிலை வடிவமைக்கப்பட்டு வருகிறது. இதில் சிறப்பு அம்சமாக, அனுமார் சிலை இலங்கையை நோக்கிப் பார்க்கும் வகையில் அமைக்கப்படுகிறது.
எதிர்வரும் பிப்ரவரி மாதத்திற்குள் அனைத்து கட்டுமானப் பணிகளையும் நிறைவு செய்ய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.


