காரைக்கால்: காரைக்காலைச் சேர்ந்த 11 மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
தமிழகம் மற்றும் புதுவையைச் சேர்ந்த மீனவர்கள் எல்லைதாண்டி மீன் பிடிப்பதாகக் கூறி இலங்கை கடற்படையால் கைது செய்யப்படுவதும் மீனவர்களின் விசைப் படகுகள் பறிமுதல் செய்யப்படுவதும் தொடர்ந்து நீடித்து வரும் சம்பவங்கள்.
இந்த நடவடிக்கைகளால் மீனவர்களின் வாழ்வாதாரம் வெகுவாக பாதிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், டிசம்பர் 28ஆம் தேதி எல்லைதாண்டி மீன்பிடித்ததாகக் கூறி ராமநாதபுரம் மண்டபம் பகுதியைச் சேர்ந்த 3 மீனவர்களையும் 30ஆம் தேதி ராமேசுவரத்தைச் சேர்ந்த 3 மீனவர்களையும் கைது செய்த இலங்கைக் கடற்படை அவர்களின் விசைப்படகையும் பறிமுதல் செய்தது.
இந்நிலையில், நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அனைத்துலக எல்லையைக் கடந்து மீன்பிடித்ததாகக் கூறி காரைக்காலைச் சேர்ந்த 11 மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் கைது செய்தனர். மேலும் மீனவர்களின் படகுகளையும் அவர்கள் பறிமுதல் செய்தனர். இருப்பினும், கைது செய்யப்பட்ட மீனவர்களின் பெயர் விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை.

