சென்னை: தமிழக அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை வேகமாக நடந்து வருவது குறித்து கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பெருமிதம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், ஏராளமான பெற்றோர் தங்கள் பிள்ளைகளை ஆர்வமுடன் அரசுப் பள்ளிகளில் சேர்த்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
“தமிழ்நாடு முழுவதும் அரசுப் பள்ளிகளில் 2025-2026ஆம் ஆண்டிற்காக மாணவச் சேர்க்கையை மார்ச் 1ஆம் தேதி சென்னையில் மாண்புமிகு முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
“அன்று முதல் கடந்த ஒரு மாதத்தில் மாநிலம் முழுவதும் 1ஆம் வகுப்பிற்கு 105,286 மழலையர் உட்பட ஏனைய வகுப்புகளும் சேர்த்து மொத்தம் 117,310 மாணவச் செல்வங்கள் சேர்ந்துள்ளனர். அனைவருக்கும் வாழ்த்துகள்.
“தொடர்ந்து மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. கல்வியின் துணை கொண்டு உலகை வெல்ல நம் அரசுப் பள்ளிகளே தலைசிறந்த முறையில் அடித்தளமிடும்,” என்று அமைச்சர் அன்பில் மகேஸ் மேலும் தெரிவித்துள்ளார்.