சென்னை: ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ என்ற பெயரில், தமிழகம் முழுவதும் இன்று (ஆகஸ்ட் 2) முதல், சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அனைத்து மக்களும் பயன்பெறும் வகையில் 1,256 இடங்களில் இந்த முகாம்கள் நடைபெறும் என முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.
சுகாதாரத் துறை சார்பில், ‘மக்களைத் தேடி மருத்துவம்’, ‘நம்மை காக்கும் 48’ ஆகிய திட்டங்களைத் தொடர்ந்து, மருத்துவச் சேவைகளைக் கடைக்கோடி குடிமகனுக்கும் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற எண்ணத்தில், ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்டம் உருவாக்கப்பட்டதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
“தமிழகத்தின் 38 மாவட்டங்களிலும் நடைபெறும் இந்த முகாம்களில் அமைச்சர்கள், எம்பிக்கள், எம்எல்ஏக்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் பங்கேற்பர்.
“388 வட்டாரங்களில், தலா மூன்று என 1,164 முகாம்கள், மண்டலத்துக்கு ஒன்று என சென்னை மாநகராட்சியில் 15 முகாம்கள், 10 லட்சம் மக்கள்தொகைக்கு அதிகமாக உள்ள 5 மாநகராட்சிகளில் தலா 4 என 20 முகாம்கள், அதைவிட குறைந்த மக்கள்தொகை உள்ள 19 மாநகராட்சிகளில் தலா 3 என 57 முகாம்கள் என்று மொத்தம் 1,256 முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது,” என்று திரு ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முகாமில் அனைத்து பயனாளிகளுக்கும் கண், காது, மூக்கு, தொண்டை, பல் மருத்துவ சேவைகள் வழங்கப்படும் என்றும் பொது மருத்துவ நிபுணர் அறிவுறுத்தலின்படி ‘எக்ஸ்ரே’, ‘ஈசிஜி’, ‘யுஎஸ்ஜி’, கருப்பை வாய், மார்பகப் புற்றுநோய் பரிசோதனைகளும்
செய்யப்பட உள்ளன என்றும் ஸ்டாலின் கூறியுள்ளார்.
பயனாளிகளின் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, ரத்த அழுத்தம் உள்ளிட்ட பரிசோதனை விவரங்கள் அவர்களுக்கு குறுஞ்செய்தி வாயிலாக முகாமிலேயே உடனடியாக தெரிவிக்கப்படும்.
தொடர்புடைய செய்திகள்
பொது மருத்துவம், அறுவை சிகிச்சை, இதயம், எலும்பியல், நரம்பியல், தோல், காது, மூக்கு, தொண்டை, மகப்பேறு, இயன்முறை, பல், கண், மனநலம், நீரிழிவு, குழந்தைகள் நலன், நுரையீரல், கதிரியக்கவியல் மற்றும் இந்திய மருத்துவம் சார்ந்த சிறப்பு நிபுணர்களை கொண்டு ஆலோசனைகள் வழங்கப்பட உள்ளதாக திரு ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு மேலும் தெரிவிக்கிறது.